பிரதமர் பதவி விலகாவிட்டால் நாங்கள் பதவி விலகத் தயார்!

0
866

பிரதமர் மகிந்த ராஜபக்ச இன்று பதவி விலகாவிட்டால் நான்கு அமைச்சர்கள் பதவி விலகத் தயாராகி வருவதாக செய்தி வெளியாகியுள்ளது.

அதற்கமைய, பிரசன்ன ரணதுங்க, ரமேஷ் பத்திரன, அலி சப்ரி மற்றும் நாலக கொடஹேவா ஆகியோர் தமது அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்யத் தயாராகி வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பிரதமர் மகிந்த ராஜபக்ச இன்று விசேட அறிக்கையொன்றை விடுத்து தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புதிய பிரதமராக நியமிக்கப்படவுள்ள பல அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை பல்வேறு தரப்பினர் ஏற்கனவே முன்மொழிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி உறுப்பினர் மயந்த திஸாநாயக்கவை தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ய வைத்து, அவருக்கு பதிலாக முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு பிரதமர் பதவி வழங்க வேண்டும் என ஒரு தரப்பினர் கருத்து வெளியிட்டுள்ளனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உபதலைவர் நிமல் சிறிபால டி சில்வாவை புதிய பிரதமராக நியமிக்க வேண்டுமென வேறு சிலர் கருத்து தெரிவித்துள்ளனர் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.