அலரிமாளிகை ஆர்ப்பாட்டம் மஹிந்தவின் திட்டமாக இருக்கலாம்!

0
532

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று பதவி விலகலை அறிவிப்பார் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் பதவி விலகுவதற்கு முன்னர் இன்று வெளியிடவுள்ள உத்தேச அறிக்கை தொடர்பில் சந்தேகம் இருப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

அத்துடன் ‘பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்ட சில முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்களை அலரிமாளிகைக்கு வரவழைத்து போராட்டம் நடத்தச் சொன்னதாக தனக்கு தகவல் உள்ளதென்றும் இன்று இது நடந்தால், பதவியை ராஜினாமா செய்ய வேண்டாம் என்று மக்கள் என்னிடம் கேட்கும்போது? ‘நான் எப்படி ராஜினாமா செய்ய முடியும்?’ என பிரதமர் கூறுவாரென அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேசமயம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான 11 கட்சிகளின் கூட்டணிக்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்துக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் குறித்து கருத்து தெரிவித்த ஜயசேகர, பேச்சுவார்த்தை வெற்றியடைந்ததாகவும் சாதகமான சூழ்நிலையில் நடைபெற்றதாகவும் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

“அரசியலமைப்புத் திருத்தங்கள் மூலம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரம் குறைக்கப்பட வேண்டும், நாடாளுமன்ற மற்றும் பிரதமரின் அதிகாரம் மேலும் அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் கட்சிகள் ஒப்புக்கொண்டன.

அரசியலமைப்பை மீறி தேசிய பாதுகாப்பு நலன்களுக்கு ஊறு விளைவிக்கும் வகையில் குறிப்பிட்ட சபை செயற்படும் பட்சத்தில் மாகாண சபையை கலைக்கும் அல்லது இடைநிறுத்துவதற்கு நிறைவேற்று ஜனாதிபதியின் அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ளவும் இரு கட்சிகளும் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதேசமயம் 1990 ஆம் ஆண்டு வடக்கு கிழக்கு மாகாணசபையின் அப்போதைய முதலமைச்சர் வரதராஜப் பெருமாள் வடக்கு – கிழக்கின் சுதந்திரப் பிரகடனத்தை ஒருதலைப்பட்சமாக செய்யுமாறு எச்சரித்தமை இதற்கு சிறந்த உதாரணமாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த அரசியலமைப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் தேர்தல் முறைமையில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்பதில் ஒருமித்த கருத்து ஏற்பட்டுள்ளதாகவும் தயாசிறி ஜயசேகர கூறினார்.

மிகவும் வெறுக்கப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்திலிருந்து சர்வகட்சி இடைக்கால அரசாங்கத்திற்கு சுமூகமான அதிகாரத்தை மாற்றுவதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வாக்குறுதியளித்தபடி பதவி விலகினால் நம்பிக்கையில்லாப் பிரேரணையை நிறைவேற்றுவது அவசியமில்லை  என்றும் அமைச்சர் தயாசிறி ஜயசேகர இதன்போது வலியுறுத்தினார்.