விரைவில் மக்கள் நாடாளுமன்றத்திற்கு தீயிடுவார்கள்!!

0
594

பாதுகாப்பு அரண்களை தகர்த்து நாட்டு மக்கள் என்றாவது நாடாளுமன்றத்தை தீயிடுவார்கள் என ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் சபையில் எச்சரித்தார்.

நாடாளுமன்றில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற கூட்டத்தொடரின் போது உரையாற்றுகையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர்,

“நாட்டு மக்களின் கருத்துகளுக்கு நாடாளுமன்றில் மதிப்பளிக்கப்படவில்லை என்ற காரணத்தினாலும்,மக்கள் நாடாளுமன்றத்தை முற்றுகையிடுவார்கள் என்ற அச்சத்தினாலும் இரும்பு வேலிகளினால் நாடாளுமன்றில் நாற்புறங்களும் முடக்கப்பட்டு, காவல்துறை, இராணுவத்தினரது பாதுகாப்புடன் நாடாளுமன்ற நடவடிக்கைகள் இடம்பெறுவதையிட்டு சபாநாயகர் உட்பட 225 பாராளுமன்ற உறுப்பினர்களும் வெட்கப்பட வேண்டும்.

நாட்டு மக்களின் கருத்துக்களுக்கு மதிப்பளிக்காமல் செயற்பட்டால் மக்கள் என்றாவது நாடாளுமன்றத்தை தீயிடுவார்கள். மக்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. அரச தலைவர் எங்கு உள்ளார் என்று தெரியவில்லை,அவரால் அரச தலைவர் செயலகத்திற்கு கூட செல்ல முடியாத நிலையில் உள்ளார்.

மறுபுறம் பிரதமர் எவ்வித விழாக்களுக்கு செல்லவும், அமைச்சர்கள் வீதிக்கும் செல்லவும் முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது இவ்வாறான நிலைமை வேறெங்கும் கிடையாது.

அரசாங்கத்திலிருந்து வெளியேறி நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்படுகிறோம் என்று குறிப்பிட்டுக்கொள்பவர்களின் உண்மை தன்மை தற்போது வெளிப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் முன்னாள் நிதியமைச்சர் பஷில் ராஜபக்ச அவலட்சன அமெரிக்கர் என விமர்சித்தவர்கள் தற்போது அவருடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுப்படுகிறார்கள்”, எனக் குறிப்பிட்டார்.