மீண்டும் அசௌகரியத்துக்கு உள்ளாகும் மக்கள்! அதிகரிக்கும் மின் வெட்டு!

0
679

 மின்வெட்டு நேரம் நீடிக்கப்படலாம் என இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

நுரைச்சோலை அனல்மின் நிலையத்திலிருந்து தேசிய மின் கட்டமைப்பு 270 மெகாவோட் மின்சாரத்தை இழந்துள்ளதாகவும், இதனால் எதிர்காலத்தில் மேலும் மின்வெட்டு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த நாட்களில் சுமார் மூன்று மணித்தியா லங்கள் மின்சாரம் தடைப்பட்டாலும், அந்த நேரம் சுமார் ஐந்து மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்படலாம் என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அதேவேளை 270 மெகாவோட் எண்ணெய் இழப்பை ஈடு கட்டுவது நஷ்டம் என்றும், அந்தத் திறனை நீர் மின்சாரத்தில் இருந்து மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொறியியலாளர் சங்கத் தலைவர் அனில் ரஞ்சித் தெரிவித்தார்.

இது தொடர்பில் மகாவலி அதிகார சபையுடன் கலந்துரையாடப்பட்ட போதும் அவர்கள் அதில் அதிக அக்கறை காட்டவில்லை எனவும் அவர் விசனம் வெளியிட்டுள்ளார்.

அதேசமயம் இழந்த இந்தக் கொள்ளளவை சமனலவெவ மற்றும் லக்ஷபான நீர் மின் நிலையத்திலிருந்து மீளப்பெற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தலைவர் தெரிவித்தார்.

இதேவேளை, எதிர்வரும் மூன்று நாட்களுக்கு 3 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, ஏ முதல் டபிள்யூ வரையிலான 20 வலயங்களிலும் இன்று 6ஆம் திகதி முதல் 8ஆம் திகதி வரை காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை 2 மணி நேர மின்வெட்டு அமுலில் இருக்கும். மாலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை 1 மணி 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.