ஹர்த்தாலுக்கு மட்டக்களப்பு மாவட்ட மக்கள் பூரண ஆதரவு வழங்க வேண்டும் என கோரிக்கை

0
390

நாடு தழுவிய ரீதியில் நாளையதினம் முன்னெடுக்கப்படவுள்ள ஹர்த்தாலுக்கு மட்டக்களப்பு மாவட்ட மக்கள் பூரண ஆதரவு வழங்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தொழிற்சங்கங்கள் இணைந்து கூட்டாகக் கோரிக்கை விடுத்துள்ளன.

மக்களை வதைக்கும் கொலைகார அரசாங்கத்தினை விரட்டியடிப்போம், மக்கள் போராட்டத்தினை வெற்றி பெறச்செய்வோம் என்னும் தொனிப்பொருளில் இவ் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு – தாமரைக்கேணியில் இன்று ஒன்றுகூடிய தொழிற்சங்கங்கள் இணைந்து இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளது.

இதன்போது விசேட ஊடகவியலாளர்கள் சந்திப்பினை ஏற்பாடு செய்த தொழிற்சங்க கூட்டமைப்பு ஹர்த்தாலுக்கான ஆதரவினை கோரியுள்ளது.

இன, மத, பேதங்கள் பாராமல் நாட்டில் மாற்றத்தினை ஏற்படுத்துவதற்கு அனைத்து தரப்பினரும் ஒன்றிணைய வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளதாகவும் அனைவரையும் ஆதரவு வழங்குமாறும் இதன்போது கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. 

நாடுதழுவிய ரீதியில் இடம்பெறவுள்ள இந்தப்போராட்டத்திற்கு மட்டக்களப்பில் உள்ள இலங்கை ஆசிரியர் சேவை சங்கம், மட்டக்களப்பு வைத்திய அரச வைத்தியர்கள் சங்கம், கிழக்கு பல்கலைக்கழக மாணவர் சங்கம், மட்டக்களப்பு வர்த்தக சங்கம், ஏறாவூர் வர்த்தக சங்கம், மட்டக்களப்பு மாவட்ட விவசாய சம்மேளனம், மட்டக்களப்பு மாவட்ட அழகுக் கலைஞர்கள் நிபுணர் சங்கம், இந்து லங்கா சமூக அமைப்பு, சமூக மாற்றத்திற்கான இயக்கம் என்பவை ஒன்றிணைந்து மட்டக்களப்பு மாவட்டத்திற்கான ஹர்த்தாலுக்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளன.