திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபராக பி.எச்.என்.ஜயவிக்ரம

0
544

திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்ட இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர அதிகாரியான பி.எச்.என்.ஜயவிக்ரம தமது கடமைகளை இன்று உத்தியோகபூர்வமாக மாவட்ட செயலகத்தில் பொறுப்பேற்றார்.

பதவியேற்பின் அரசாங்க அதிபர் கருத்து தெரிவிக்கையில்,

”திருகோணமலை மாவட்டம் என்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மாவட்டமாகும். பல்லினங்கள் மற்றும் பல மொழிகளைப் பேசும் மக்களைக் கொண்ட மாவட்டமாகும்.

நாடு அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ள இந்த சந்தர்ப்பத்தில் தமக்கு இந்நியமனம் கிடைக்கப்பெற்றுள்ளது. தமக்கு வழங்கப்பட்ட இந்நியமனத்திற்கான பொறுப்புக்களை இன, மத, மொழி வேறுபாடின்றி செயலாற்றவுள்ளேன்” இவ்வாறு கூறியுள்ளார்.

சிறிஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் வியாபார நிருவாகமாணி(Bsc Business Administration) விசேட பட்டமாக ஆரம்ப பட்டத்தைப் பூர்த்தி செய்த இவர் Master of public Management பட்டத்தை இலங்கை நிருவாக அபிவிருத்தி நிறுவனத்திலும், Master of Applied Economics பட்டப்பின் பட்டத்தை பேராதனை பல்கலைக்கழகத்திலும் பூர்த்தி செய்துள்ளார்.

1992 ஆம் ஆண்டு இலங்கை நிர்வாக சேவை திறந்த போட்டிப்பரீட்சை மூலம் இச்சேவைக்குள் உள்ளீர்க்கப்பட்ட இவர் மெதிரிகிரிய உதவி பிரதேச செயலாளர், ஹிக்கடுவ உதவி பிரதேச செயலாளர், Department of Upcountry Peasantry Rehabilitation இன் உதவி ஆணையாளர், மின்சக்தி மற்றும் வலுச்சக்தி அமைச்சின் பிரதி பணிப்பாளர் ஆகிய பதவிகளையும் வகித்துள்ளார்.

மேலும் பிரதமர் அலுவலகத்தின் உதவி செயலாளர், குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்களத்தின் பிரதி கட்டுப்பாட்டாளர், கைத்தொழில் அபிவிருத்தி மற்றும் தொழில் முயற்சிகள் ஊக்குவிப்பு திணைக்களத்தின் பிரதி பணிப்பாளர், மத்திய மாகாண உள்ளூராட்சி திணைக்களத்தின் ஆணையாளர், மத்திய மாகாண விவசாயம், சிறிய நீர்ப்பாசனம், கால்நடை வளர்ப்பு அபிவிருத்தி திணைக்களத்தின் செயலாளராகவும் கடமையாற்றி இவர் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபராக நியமிக்கப்பட முன்னர் மத்திய மாகாண சுகாதாரம், சுதேச வைத்தியம்,சமூக நலன்புரி, நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்பு சேவை அமைச்சின் செயலாளராகக் கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது.