மரண வேளையில் ஆசையை நிறைவேற்றிய அலெக்சாண்டர்

0
646

மாவீரன் அலெக்சாண்டர் எல்லா நாடுகளையும் வெற்றி கொண்டு, தன் நாடு திரும்பும் வழியில் உடல் சுகவீனப் பட்டு படுக்கையில் கிடந்தார்.

மரணம் தன்னை நெருங்கி வருவதை உணர்ந்த அவர், தான் பெற்ற வெற்றி, தன்னுடைய பெரிய போர்ப்படை, வீர வாள், திரண்ட செல்வம் எல்லாம் வீணாகிப் போவதை அறிந்தார் தன்னுடைய படைத் தளபதியை அழைத்த அவர், “எப்படியும் சில நாட்களில் நான் இறந்து விடுவேன்.

என்னுடைய மூன்று விருப்பங்களை நிறைவேற்ற வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார்.

கண்ணீர் வழிய நின்ற தளபதியும் நிறைவேற்றுவதாக உறுதி அளித்தார். “என்னுடைய முதல் ஆசை, என்னுடைய சவப்பெட்டியை என்னுடைய மருத்துவர்களே தூக்கி செல்ல வேண்டும்.

இரண்டாவதாக, என்னுடைய இறுதிப் பயணத்தின்போது, கல்லறை வரை வழியெங்கும் நான் சம்பாதித்த தங்க, வைர, வைடூரிய பொருட்களை இறைத்தபடி செல்ல வேண்டும்.

மூன்றாவதாக, சவப் பெட்டிக்குள் என்னை வைக்கும்போது, என் இரண்டு கைகளையும் வெளியில் தெரியும்படி வைக்க வேண்டும்” என்றார். கூடி இருந்த மக்களெல்லாம் இந்த வித்தியாசமான வேண்டுகோள்களைக் கேட்டு வியந்தனர்.

ஆனால் ஒருவரும் அவரைக் கேட்க தயங்கினர். அலெக்ஸாண்டருடைய நம்பிக்கைக்குரிய படைத் தலைவர் மட்டும் அவரை நெருங்கி அவர் கையை முத்தமிட்டு, அவரிடம், “மன்னர் அவர்களே, உங்கள் ஆசையை நிச்சயம் பூர்த்தி செய்வோம்.

ஆனால், இந்த ஆசைக்கான காரணம் மட்டும் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்” என்றார் ஒரு நீண்ட மூச்சு விட்டபின், அலெக்ஸாண்டர் சொன்னார், “மூன்று விஷயங்களை மக்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன்.

முதலாவதாக, மருத்துவர்களால் போகும் உயிரை நிறுத்த முடியாது, என்பதை உணர்த்தவே, என்னுடைய சவப்பெட்டியை அவர்களை விட்டு எடுத்து செல்ல விரும்புகிறேன்.

இதன் மூலம் மக்கள் வாழ்க்கையை எளிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. “ஒரு மனிதன் இறந்து போகும்போது, தான் சம்பாதித்த சிறு துரும்பைக் கூட எடுத்துச் செல்ல முடியாது, எனவே, பணம், பொருள் மீது ஆசை கொண்டு அலைவதை மக்கள் நிறுத்த வேண்டும்.

இதை வலியுறுத்தும் விதமாகத்தான், என் சவப்பெட்டி செல்லும் வழி எங்கும் தங்க, வைர பொருட்களை இறைத்து செல்ல வேண்டும் என்று இரண்டாவது ஆசையை தெரிவித்தேன் “நான் பிறக்கும்போதும் ஒன்றும் கொண்டு வரவில்லை, இறந்தபிறகும் என்னோடு எதுவும் எடுத்துச் செல்லவில்லை என்பதை இந்த உலகத்துக்கு தெரிவிக்கவே, என் இரண்டு கைகளையும் சவப்பெட்டிக்கு வெளியே தெரியுமாறு வைக்க மூன்றாவது ஆசையை வெளியிட்டேன்”.

அலெக்ஸாண்டரின் கடைசி வார்த்தைகள் .”நான் இறந்தபிறகு, என்னைப் புதையுங்கள், எந்த நினைவுச் சின்னமும் வேண்டாம்.

என்னுடைய இரண்டு கைகளையும் சவப்பெட்டியின் வெளியே தெரியுமாறு செய்யுங்கள். இந்த உலகத்தையே வென்ற ஒருவன், மரணத்திற்கு பிறகு தன்னுடன் ஒன்றும் கொண்டு செல்லவில்லை என்பதை இந்த உலகம் அறிந்து கொள்ளட்டும்.