உண்மையில் நடந்தது என்ன? கிழக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் விளக்கம்!

0
488

கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற்கற்கை நிறுவகத்தில் கடந்த 20ம் திகதி அன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாணவர்கள் உண்மைக்கு புறம்பாக ஊடகங்களில் கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளதுடன், சுவாமி விபுலாநந்தா அழகியற்கற்கை நிறுவகத்திற்கு களங்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் கிழக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் கலாநிதி வி.கனகசிங்கம் தெரிவித்துள்ளார்.

சுவாமி விபுலானந்தா அழகியற்கற்கை நிறுவகத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பாக நேற்று (02) துணைவேந்தர், ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த ஊடக அறிக்கையில் தெரிவித்ததாவது,

 “சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கை நிறுவகத்தில் இடம்பெற்ற பகிடிவதை, வன்முறைகள். மற்றும் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் தொடர்பாக விசாரணைக் குழுவினால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு அதில் மாணவர்களின் பயன்பாட்டிற்காக ஆண்கள் விடுதியில் இருந்த தொலைக்காட்சி பெட்டி உடைக்கப்பட்டமை, இதனை உடைத்த மாணவர்கள் உடைக்கப்பட்ட தொலைக்காட்சி பெட்டியின் பெறுமதி தொகையை சமமாக பிரித்துச் செலுத்துவதோடு குறிப்பிட்ட அந்த மாணவர்கள் தொடர்ந்து விடுதியில் தங்கியிருக்க தடைவிதிக்கப்பட்டது.

அத்துடன் பகிடிவதையினை ஊக்குவித்தமை மற்றும் துணையாக செயற்பட்டமை காரணமாக நான்காம் ஆண்டு மாணவர் ஒருவரின் வழிநடத்தலில் பகிடிவதை நடடிக்கைகளுக்காக துணைபோகுமாறு முதலாம் ஆண்டு மாணவர்களை கட்டாயப்படுத்திய முதலாம் வருட மாணவர் மற்றும் நான்காம் வருட மாணவர் ஆகியோருக்கு மூன்று வார காலத்துக்கு நிர்வாகத்துக்குள் உள் நுழைவதற்கு தடைவிதிக்கப்பட்டது.

அதேவேளை பகிடிவதை மேற்கொண்டமை தொடர்பாக நான்காம் ஆண்டு மாணவர் ஒருவர் பகிடிவதை என்ற பெயரில் முதலாம் ஆண்டு மாணவரை தாக்கியதன் காரணமாக நிர்வாகத்துக்குள் உள் நுழைவதற்கு தடைவிதிக்கப்பட்டது.

இந்த விடயங்களை அறிந்த மாணவர் ஒன்றியம் ஒழுக்காற்று  கடந்த (29) திகதி அன்று அறிவிக்கப்பட்ட மாணவர்களை ஒன்று திரட்டி மேற்படி ஒழுக்காற்றை வாபஸ் பெறுமாறும், குறிப்பிட்ட மாணவர்களை நிர்வாகத்துக்குள் அனுமதிக்குமாறும் நிபந்தனைகளை முன்வைத்து பணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கோஷம் எழுப்பினர்.

இது தொடர்பாக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகளை அழைத்து துறைத் தலைவர்கள், சிரேஷ்ட மாணவர், ஆலோசகர் மற்றும் மாணவர் ஒன்றிய பொருளாளர் போன்ற குழுவினை உள்ளடக்கிய குழுவினரிடம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்த சமயம் காரியாலயத்துக்கு வெளியில் பகிடிவதைக்கு ஒத்துழைக்காத காரணத்தினால் முதலாம் தர மாணவர்கள் சிலர் சிரேஸ்ட மாணவர்களால் பாரதூரமாக தாக்கப்பட்டனர்.

அதனை தடுக்கு முற்பட்ட சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி சீவரெத்தினம் நான்காம் வருட மாணவர்களின் தாக்குதலுக்கு உள்ளானதோடு அவரது கையடக்க தொலைப்பேசியும் பறித்து உடைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து பணிப்பாளர் விரிவுரையாளர்கள் உட்பட 10 பேரை இரவு 12 மணிவரை வெளியில் செல்லாதவாறு காரியாலயத்தில் வைத்து பூட்டியுள்ளனர்.

மாணவர்களால் இழைக்கப்பட்ட நீதிக்கு புறம்பான வன்முறையினை மூடிமறைத்து தங்களுக்கு அனுதாபத்தை தேடிக் கொள்வதற்காக விரிவுரையாளர் ஒருவரால் தாக்கப்பட்டதாக விரிவுரையாளரை தாக்கிய மாணவர்களே உண்மைக்கு புறம்பான தகவல்களை ஊடகங்களுக்கு கூறியதுடன் தங்களை வைத்தியசாலையிலும் அனுமதித்துக் கொண்டனர்.

இந்த விடயம் தொடர்பாக கடந்த (01)ம் திகதியன்று கல்விசார் அவைக்குழு மற்றும் முகாமைத்துவசபை என்பன நடந்தேறிய விரும்பத்தகாத செயல்களை நுட்பமாக பரீசிலனை செய்து மாணவர்களின வன்முறை நடவடிக்கைகளை கண்டித்ததுடன், நிர்வாகத்தில் சுமூகமான சூழலையும் விரிவுரையாளர்களின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு (03)ம் திகதி காலை எட்டு மணிக்குள் நிறுவகத்தில் இருந்து அனைத்து மாணவர்களும் வெளியேறுவதோடு மறு அறிவித்தல் வரை அவர்கள் உட்பிரவேசிக்க முடியாது எனவும் பல்கலைக்கழக கல்விசார் உறுப்பினர்களை உள்ளடக்காத சுதந்திரமான விசாரணைக்குழு ஒன்றை அமைக்கப்பட்டும்,மேற்படி விசாரணைக் குழுவின் அறிக்கை ஒரு மாத காலத்துக்குள் முகாமைத்துவ சபைக்கு வழங்கப்பட வேண்டும் எனவும். விசாரணைக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் தவறிழைத்தவர்களுக்கு பொருத்தமான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தீர்மானிக்கப்பட்டது” என அந்த ஊடக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.