மட்டக்களப்பு கிழக்கு பல்கலைக்கழக வளாகத்தினுள் பரபரப்பு!

0
531

மட்டக்களப்பு கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கை நிறுவகத்தில் விடுதிகளில் உள்ள மாணவர்களை வெளியே செல்லவிடாமலும் வெளியில் இருந்து மாணவர்களை வளாகத்திற்குள் செல்லவிடாமலும் தடுத்தமையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இன்று காலை வாசல் கதவை பூட்டிய நிர்வாகம் விடுதியில் தண்ணீர் மின்சாரத்தையும் தடை செய்துள்ளதாக தெரிவித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறித்த பல்கலைகழகத்தில் கடந்த 29 ம் திகதி இரு மாணவர்களை விரிவுரையாளர் தாக்கிய சம்பவத்தையடுத்து, குறித்த விரிவுரையாளரை தடுத்து மாணவர்கள் நீதிகோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன்பின்னர் குறித்த பிரச்சினை தொடர்பாக ஒருவாரத்தில் தீர்வு பெற்றுத்தரப்படும் என பல்கலைகழக நிர்வாகம் உறுதிமொழி வழங்கியதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

இந்த நிலையில் நேற்று இரவு 12 மணியளவில் கடிதம் ஒன்று கிடைக்கப்பெற்றதாகவும் அதில் உடனடியாக மாணவர்கள் விடுதியைவிட்டு வெளியேறவேண்டும் என அறிவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

எனினும் மாணவர்கள் உடனடியாக வெளியேறமுடியாத சூழலில் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ள தீர்மானித்திருந்த நிலையில், நிர்வாகம் இவ்வாறு நடந்துகொள்வதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் மாணவர்கள் காலைக்கடனை முடித்து உணவு உட்கொள்ள முடியாமலும் அவதிப்படுவதாக மாணவர் சங்க தலைவர் வி.சுரேந்திரன் தெரிவித்தார்.

  இந்நிலையிலேயே, மாணவர்கள் தொடர்ந்து நிர்வாகத்துக்கு எதிராக கோஷம் எழுப்பியவாறு பூட்டிய கதவின் முன்பாக நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.