தலீபான்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

0
597

ஆப்கானிஸ்தானில் தலீபான்களுக்கு எதிராக புதிய போர் தொடங்கப்படும் என்று முன்னாள் ராணுவ தளபதி சூளுரைத்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளாக உள்நாட்டு போரில் ஈடுபட்டு வந்த தலீபான் பயங்கரவாதிகள் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் கடுமையான தாக்குதல்களை நடத்தி நாட்டை தங்கள் வசம் ஆக்கினர்.

அதனை தொடர்ந்து ஆப்கானிஸ்தான் ராணுவத்தின் மூத்த அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் அனைவரும் நாட்டை விட்டு வெளியேறி பல நாடுகளில் தஞ்சம் புகுந்தனர்.

அந்த வகையில் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் தஞ்சமடைந்துள்ள ஆப்கானிஸ்தானின் முன்னாள் ராணுவ தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் சாமி சதாத் (Lieutenant General Sami Sadat), தலீபான்களுக்கு எதிராக புதிய போர் தொடங்கப்படும் என சூளுரைத்துள்ளார்.

முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் அரசியல்வாதிகளுடன் சேர்ந்து போருக்கு தயாராகி வருவதாகவும், அடுத்த மாதம் ரம்ஜான் பண்டிகைக்கு பிறகு போர் தொடங்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “ஆப்கானிஸ்தான் தலீபான்களிடமிருந்து விடுவிக்கப்படுவதையும், அங்கு ஒரு ஜனநாயக அமைப்பு மீண்டும் நிறுவப்படுவதையும் உறுதிப்படுத்த எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம்.

நாங்கள் தலீபான்களுக்கு எதிரானவர்கள் அல்ல. ஆப்கானிஸ்தான் அனைவருக்கும் பொருந்தக்கூடிய நாடாக இருக்க வேண்டும், தலீபான்களுக்கு மட்டும் ஒரு நாடாக இருக்கக்கூடாது” என்றார்.