பல்கலை விரிவுரையாளர்களை பூட்டிவைத்த மாணவர்கள்!

0
477

மட்டக்களப்பு கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கை நிறுவகத்தில் இரு மாணவர்கள் மீது விரிவுரையாளர் ஒருவர் நேற்று இரவு தாக்குதல் நடாத்தியதை கண்டித்து விரிவுரையாளர்களை வெளியே செல்லவிடாது பல்கலைக்கழக கதவை மூடி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

மட்டு. கல்லடியில் அமைந்துள்ள குறித்த நிறுவகத்தில் கல்விகற்றுவரும் இரண்டாம் வருட 2 மாணவர்களும் ஒரு முதலாம் ஆண்டு மாணவர்கள் உட்பட 3 மாணவர்கள் பகிடிவதையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கல்வி கற்க இடை நிறுத்தப்பட்டனர்.

நாட்டின் சூழலை கருத்தில் கொண்டு அவர்கள் மீது கல்வி கற்க தடைசெய்யப்பட்டதை நீக்ககோரி மாணவர்சங்க மாணவர்கள் நிர்வாகத்திடம் கோரிக்கை ஒன்றினை நேற்று முன்வைத்தனர்.

Gallery

இதனை தொடர்ந்து பிற்பகல் 3 மணிக்கு இது தொடர்பான கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என நிர்வாகம் அறிவித்த நிலையில் மாலை 6.30 மணியளவில் தீர்வு அதற்கான தீர்வினை நிர்வாகம் வழங்காத நிலையில் விரிவுரையாளர் கள் பல்கலைக்கழக வளாகத்திலிருந்து வெளியேறிய போது மாணவர்கள் எங்களது கோரிக்கைக்கு தீர்வு வழங்கிவிட்டு செல்லுமாறு கோரி அவர்களை செல்லவிடாது தடுத்தனர்.

இதன் போது இரு தரப்புக்கும் இடையே முரண்பாடு எற்பட்ட நிலையில் விரிவுரையாளர் ஒருவர் இரு மாணவர்கள் மீது தாக்குதல் நடாத்திய நிலையில் படுகாயமடைந்த மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் மாணவர்கள் உடனடியாக பல்கலைக்கழக வாயில் கதவுகளை மூடி தாக்கப்பட்ட மாணவர்கள் இருவருக்கும் நீதி கோரி பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து பல்கலைக்கழக பணிப்பாளர், விரிவுரையாளர்கள் உட்பட 10 மேற்பட்டவர்களை அங்கிருந்து வெளியேற விடாது வாசல் கதவுகளை மூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதையடுத்து அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது.

இதனையடுத்து பொலிசார் வரவழைக்கப்பட்டு அங்கு பலத்த பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொண்ட நிலையில் பொலிசார் பல்கலைக்கழகத்துக்குள் நுழைய முற்பட்டபோது மாணவர்கள் அவர்களை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. மாணவர்களை தாக்கிய விரிவுரையாளர் வேண்டாம், தாக்குதலுக்கு உள்ளான மாணவர்களுக்கு நீதி வேண்டும், இடைநிறுத்தப்பட்ட மாணவர்களுக்கு நீதி வேண்டும், கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தர் இங்கு வர வேண்டும் எனக் கோரி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தையடுத்து பல்கலைக்கழக விரிவுரையாளர் குழு ஒன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட பின்னர் நிறுவக பணிப்பாளர் மற்றும் நிர்வாக பிரிவுடன் மாணவர் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதன் போது மாணவர்கள் ஒரு உடன்பாட்டிற்கு வந்ததையடுத்து இரவு 12 மணிக்கு ஆர்ப்பாட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு விரிவுரையாளர்கள் வெளியேறிச் சென்றதாக கூறப்படுகின்றது.