இழப்பீடு கோரும் Go Home Gota ஒருங்கிணைப்பாளர்!

0
674

‘கோ ஹோம் கோட்டா ’ எனும் முகநூல் பக்கத்தை இயக்கியதற்காக கைது செய்யப்பட்ட சமூக ஊடக செயற்பாட்டாளரான அனுருத்த பண்டார, ரூ.100 மில்லியன் இழப்பீடு கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

ஏப்ரல் 2ஆம் திகதி அவர் திடீரெனக் காணாமல் போயிருந்தமை சர்ச்சையானதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டதை மோதர குற்றப் பிரிவினர் உறுதிசெய்தனர். ‘#GoHomeGota2022’ என்ற முகநூல் பக்கத்தின் மூலம் ஜனாதிபதி மற்றும் அரசு மீது அதிருப்தி உணர்வுகளைத் தூண்ட முயன்றதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் தம்மைக் கைது செய்தமையும், தடுத்து வைக்கப்பட்டுள்ளமையும் தனது அடிப்படை உரிமைகளை மீறும் செயலாகும் என அனுருத்த பண்டார உயர் நீதிமன்றத்தில் நேற்று மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். மேலும், தமக்கு இழப்பீடாக ரூ.100 மில்லியன் வழங்க உத்தரவிடுமாறும் அனுருத்த பண்டார கோரியுள்ளார். மனுவில் பிரதிவாதிகளாக பொலிஸ் மா அதிபர் சந்தன விக்கிரமரத்ன, சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், பிரதி பொலிஸ் மா அதிபர் சந்திர குமார, மோதர பொலிஸ் பொறுப்பதிகாரி நளின் ஸ்ரீயந்த, சட்டமா அதிபர் உள்ளிட்ட பலர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

அனுருத்த பண்டார, கொழும்பு பல்கலைக்கழகத்தில் தனது பட்டப்படிப்பை முடித்த பின்னர், பிரிட்டனில் உள்ள மாணவர்களுக்கு ஒன்லைன் மூலம் கணிதம் கற்பித்ததாக மனுதாரர் கூறுகிறார். தனக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த நாட்டிற்கும் நன்மை பயக்கும் வெளிநாட்டு நாணயத்தை தன்னால் ஈட்ட முடிந்தது என்றார்.

ஒரு இளைஞனாக இலங்கையில் நிலவும் அரசியல் அமைப்பில் தான் ஆழ்ந்த அதிருப்தியுடன் இருப்பதாகவும், அதனால் இலங்கை உலகில் பெரும் பின்னடைவைச் சந்தித்திருப்பதாகவும் அனுருத்த பண்டார கூறுகிறார்.

தற்போதைய அரசாங்கத்தின் பொறுப்பற்ற தீர்மானங்களுக்கும் தற்போதைய அரசியல் அமைப்புக்கும் எதிராக 55,000க்கும் அதிகமான பின்தொடர்பவர்களைக் கொண்ட தனது முகநூல் பக்கத்தின் ஊடாக இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளதாகவும், அவ்வாறான போராட்டத்தை அமைதியான முறையில் நடத்துமாறு அறிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஐந்து வருட காலத்திற்கு ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் ஜனாதிபதிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த தமக்கு உரிமையில்லை எனவும், எனவே பொலிஸ் நிலையம் அழைத்துச் செல்லவுள்ளதாகவும் மோதர பொலிஸ் பொறுப்பதிகாரி தம்மிடம் குறிப்பிட்டதாக மனுதாரர் குறிப்பிட்டுள்ளார். மேலும், பி அறிக்கையில் மனுதாரருக்கு கலாநிதி பதும் கெர்னருடன் தொடர்பு இருப்பதாகவும், இலங்கையில் கிளர்ச்சியை ஏற்படுத்த மனுதாரர் அவருக்கு ஆதரவளிப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

“இருப்பினும் இப்போதும் கலாநிதி பதும் கெர்னர் இலங்கைக்கு வந்து பொது வெளியிலும் சமூக வலைதளங்களிலும் தோன்றி வருகிறார். எனினும் அவர் மீது காவல்துறை இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று மனுதாரர் கூறியுள்ளார். கலாநிதி பதும் கெர்னருடன் தொடர்பு வைத்திருந்ததற்காக, மனுதாரரை கைது செய்வதற்காக இட்டுக்கட்டப்பட்ட பொய்யான குற்றச்சாட்டின் கீழ், குற்றவியல் சட்டத்தின் 120வது பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டு ஆஜர்படுத்தப்பட்டதை நியாயப்படுத்த காவல்துறையிடம் ஒரு துளியும் ஆதாரம் இல்லை என்று மனுதாரர் கூறுகிறார்.

அதோடு எவ்வித நியாயமான காரணமும் இன்றி தாம் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்து சட்டத்தரணி யோஹான் அந்தோனி பீரிஸ் ஊடாக , அனுருத்த பண்டார இந்த மனுவை தாக்கல் செய்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.