இந்த ஆண்டு அதிகளவான இலங்கையர்கள் வறுமையில் வாடுவார்கள்: உலக வங்கி எச்சரிக்கை!

0
607

இந்த ஆண்டு அதிகளவான இலங்கையர்கள் வறுமையில் வாடுவார்கள் என உலக வங்கி எச்சரித்துள்ளது. அதிக அளவிலான கடனை நிவர்த்தி செய்வதற்கும், நிதிப் பற்றாக்குறையைக் குறைப்பதற்கும் மேற்கொள்ளும் நடவடிக்கைகளால், ஏழைகள் மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு ஏற்படும் பாதகமான தாக்கங்களைக் குறைப்பதற்கும் அரசாங்கம் அவசர கொள்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளது.

சுதந்திரத்திற்குப் பின்னர் இலங்கை தற்போது வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.

இலங்கையில் சுமார் 11.7 வீதமான மக்கள் நாளொன்றுக்கு 3.20 அமெரிக்க டொலர்களுக்கும் குறைவாகவே சம்பாதிப்பதாக உலக வங்கி தெற்காசிய பிராந்தியத்தின் வசந்த காலப் புதுப்பிப்பில் கூறியுள்ளது. குறைந்த நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுக்கான சர்வதேச வறுமைக் கோடு, 2019 இல் 9.2 சதவீதமாக இருந்தது.

உலக வங்கியின் கூற்றுப்படி, நாட்டில் வறுமை விகிதங்கள் அதிகரிப்பதற்கு மற்றைய காரணம், சுமார் 1.2 மில்லியன் ஏழைக் குடும்பங்களை உள்ளடக்கிய அரசாங்கத்தின் சமுர்த்தித் திட்டம் போதுமானதாக இல்லாததே ஆகும்.

ஏழைகளில் பாதிக்கும் குறைவானவர்களே சமுர்த்தியின் பயனாளிகள் என்றும், உதவித் தொகைகள் பெரும்பாலும் போதுமானதாக இல்லை என்றும் அது கூறியது.

COVID-19 தொற்றுநோய் காரணமாக, இலங்கையின் பொருளாதாரம் 2020 இல் 3.6 சதவீதத்தால் சுருங்கியது என்றும் உலக வங்கி குறிப்பிட்டுள்ளது.