பெரும்பான்மை இல்லாவிட்டால் விலகி விடுவேன்! – பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவிப்பு

0
321

“பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்கள் என் பக்கம்தான் இருக்கின்றார்கள். பெரும்பான்மையினரின் ஆதரவு எனக்கு இருக்கும் வரை நான்தான் பிரதமர். பெரும்பான்மை ஆதரவு எனக்கு இல்லாவிட்டால் நானாகவே விலகி விடுவேன்.” என பிரதமர் மகிந்த ராஜபக்ச திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பில் தமிழ் பத்திரிகை ஒன்றுக்கு நேற்று மாலை அவர் வழங்கிய செவ்வியிலேயே இந்த விடயத்தை கூறியுள்ளார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், 

“நாடாளுமன்றப் பெரும்பான்மை எனக்கு இருக்கும் வரை என்னை யாரும் பிரதமர் பதவியிலிருந்து அகற்ற முடியாது. நாடாளுமன்றத்துக்கு வெளியில் போராட்டம் நடத்தும் மக்களின் குரலிலே அவர்களது கோரிக்கை எனக்குக் கேட்கின்றது. அவை பேசித் தீர்க்கப்பட வேண்டிய விடயங்கள்.

ஒவ்வொரு அரசு வரும்போதும் மக்கள் போராட்டங்கள் நடக்கும். மக்கள் போராட்டங்களுக்காக அரசுகள் விலகுவது என்றால் எந்த அரசும் இந்த நாட்டில் இருக்க முடியாது. ஜனநாயக நாட்டில் போராட்டங்கள் நடப்பது வழமை. அவற்றின் கருத்துகள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியவை.

ஆனால், அதற்காக ஜனநாயக விரோத முறையில் அரசுகளைக் கலைக்க வேண்டும் என்பதல்ல. 2015 இல் ஜனாதிபதித் தேர்தல் முடிவு அறிவிக்கப்படும் முன்னரேயே, உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து புறப்பட்டு விட்டேன். ஜனநாயகத்துக்கு முரணான வகையில் பதவியைப் பிடித்து வைத்திருக்கும் எண்ணம் எனக்கு கிடையாது.

ஆனால், இப்போது ஜனநாயக ரீதியில் பெரும்பான்மை என் பக்கம்தான் உள்ளது. ஆகவே, நான் பிரதமராகப் பதவியில் நீடிப்பேன். அது மக்கள் தீர்ப்பு. சம்பந்தப்பட்டோர் இதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

வெளியில் ஆர்ப்பாட்டம் நடத்துவோர் எங்களோடு பேசலாம். பேசித் தீர்ப்பதற்கான வாய்ப்பை அவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று நான் கோருகின்றேன்” என திட்டவட்டமாக எடுத்துரைத்துள்ளார்.