அரசாங்கத்தை கவிழ்க்க பெரும் திட்டம் – இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர்

0
415

கொழும்பில் அரச தலைவர் செயலகத்திற்கு எதிரில் நடக்கும் ஆர்ப்பாட்டமானது அரசாங்கத்தை கவிழ்க்கும் திட்டத்துடன் நடத்தப்படுவதாக இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கொழும்பு 7 பகுதியைச் சேர்ந்த நன்கு சாப்பிட்டு, குடித்து மகிழ்ச்சியாக இருக்கும் நபர்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.

அரசாங்கத்தை அமைக்கும் தேவை இருந்தால், 5 வருடங்களின் பின்னர் நடக்கும் தேர்தலில் அரசாங்கத்தை தோற்கடித்து ஆட்சியை கைப்பற்றுங்கள். திருட்டு வழியில் மங்களம்பாட தயாராக வேண்டாம் என எச்சரிப்பதாக சத்தாதிஸ்ஸ தேரர் கூறியுள்ளார்.

அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவித்து நேற்று பிக்குமார் நடத்திய பேரணியில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

சத்தாதிஸ்ஸ தேரர் உட்பட நேற்று கொழும்பில் பேரணி நடத்திய பிக்குகள், கடந்த காலத்தில் தற்போதைய அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வரும் நோக்கில் இனவாத ரீதியான பிரசாரங்களை மேற்கொண்டு வந்தவர்கள் எனக் கூறப்படுகிறது.

இந்தப் பேரணியில் டேன் பியசாத், பாடகர் இராஜ் போன்ற அரசாங்கத்திற்கு ஆதரவான சமூக வலைத்தள செயற்பாட்டாளர்களும் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.