தமிழ்த் தேசிய மே தின நிகழ்வுகள் நடாத்த ஏற்பாடு: அனைத்து தரப்பிற்கும் அழைப்பு

0
399

தமிழ்த் தேசிய மே தின நிகழ்வுகள் வடக்கில் கிளிநொச்சியிலும், கிழக்கில் மட்டக்களப்பிலும் நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அனைத்து தரப்பினரும் கட்சி பேதமின்றி கலந்துகொள்ளுமாறும் இன்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் இன்று இடம்பெற்ற தமிழ்த் தேசிய மே நாள் ஏற்பாட்டுப் பேரவையின் ஊடக சந்திப்பில் இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த ஊடக சந்திப்பு இன்று காலை 9 மணியளவில் தமிழரசு கட்சி அலுவலகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது தமிழ்த் தேசிய மேதின ஏற்பாட்டுப் பேரவை உறுப்பினர்கள் ஊடக சந்திப்பில் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளனர்.

இவ் ஏற்பாட்டுக் குழு சார்ப்பில் கரைச்சி பிரதேச சபை தவிசாளர் வேழமாலிகிதன் தெரிவிக்கையில்,

தமிழ்த் தேசிய மேநாள் நிகழ்வு வடக்கு மாகாணம் தழுவி எதிர்வரும் 1ஆம் திகதி பிற்பகல் 1 மணிக்கு கரடிபோக்கு சந்தியில் பேரணியோடு ஆரம்பிக்கப்பட்டு, கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள பசுமை பூங்காவில் நிறைவடைய உள்ளது.

குறித்த பேரணியில் தமிழ்த் தேசியத்தின்பால் செயற்படுகின்ற அரசியல் கட்சிகள், பொது அமைப்புக்கள், பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு மேதின நிகழ்வின் ஊடாக அரசுக்கும், சர்வதேசத்திற்கும் ஓர் செய்தியைச் சொல்ல வேண்டும்.

இந்த அரசு வேண்டாம் என்றே எமது மக்கள் வாக்களித்தனர். ஆனால் இன்று அதனை சிங்கள மக்கள் உணர்கின்றனர். இந்த நிலையில் எமது நாட்டில் வாழும் சிங்கள மக்களிற்காகவும் குறித்த தினத்தில் ஓர் செய்தியை அரசுக்கு விடுக்க வேண்டும்.

இன்று சிங்கள மக்கள் பொருளாதாரத்தினால் மிகவும் நசுக்கப்படுகின்றார்கள். இந்த நிலை மாற்றப்பட்டு சிங்கள மக்களையும் பாதுகாக்கும் வகையில் எமது எழுச்சியானது சர்வதேசத்திற்கு நல்ல செய்தியைக் கொண்டு செல்ல வேண்டும்” இவ்வாறு கூறியுள்ளார்.

குறித்த ஊடக சந்திப்பில், விவசாய அமைப்புக்கள், சிவில் அமைப்புக்கள், பிரஜைகள் குழு, வர்த்தக சங்கங்கள் ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகளும் கருத்துக்களைத் தெரிவித்தனர்.

அவர்கள் தெரிவிக்கையில், இந்த அரசாங்கம் விவசாயத்தின் மீது கைவைத்தது. அதனால் இன்று அனுபவிக்கின்றனர். விவசாயிகளாக நாங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளோம். விவசாயிகள் அனைவரும் குறித்த பேரணியில் பங்கெடுத்து எமது பிரச்சினைகளை முன்வைக்க வேண்டும். அதற்காக அனைத்து விவசாய அமைப்புக்களும் முன்வர வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.