விடுதி ஒன்றில் தங்கியிருந்த இளைஞன், பெண் மற்றும் சிறுமி ஒருவர் பொலிஸாரினால் கைது!

0
391

மட்டக்களப்பில் உல்லாச விடுதி ஒன்றில் தங்கியிருந்த இளைஞன், பெண் மற்றும் சிறுமி ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

மட்டக்களப்பில் 28 வயதுடைய பெண் மற்றும் அவருடைய சகோதரியான 14 வயது சிறுமி ஒருவரும் காணாமல் போயிருந்த நிலையில் விடுதி ஒன்றில் இளைஞனருடன் இருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டனர். 

இது தொடர்பில்  கைது செய்யப்பட்ட இளைஞன் உட்பட மூன்று பேரில் இருவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த பகுதியைச் சேர்ந்த திருமணம் முடித்துள்ள 28 வயதுடைய பெண் மற்றும் அவரது சகோதரியான14 வயது சிறுமியை சம்பவதினமான செவ்வாய்கிழமை (5) மாலை 5 மணியளவில் தனியார் வகுப்புக்கு கூட்டிச் சென்ற நிலையில் இரவாகியும் வீடுதிரும்பாத நிலையில் காணாமல் போயுள்ளதாக அவர்களது உறவினர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.

இதனையடுத்து பொலிசார் மேற்கொண்ட விசாரணையில் நாவற்குடா பகுதியிலுள்ள உல்லாச விடுதி ஒன்றில் இருப்பதை கண்டுபிடித்த பொலிசார் அந்த விடுதியை புதன்கிழமை (6) இரவு முற்றுகையிட்டபோது அந்த விடுதி அறையில் 22 வயதுடைய இளைஞன் ஒருவருடன் சிறுமியும் அவரது சகோதரியும் மறைந்து இருந்த நிலையில் மூவரையும் கைது செய்தனர்

 குறித்த இளைஞன் வாழைச்சேனை பகுதியைச் சேர்ந்தவர் எனவும் அவனுக்கும் திருமணம் முடித்த 28 வயதுடைய பெண்ணுக்கும் முகல்நூல் ஊடாக அறிமுகமாகிய நிலையில் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்ட நிலையில் இளைஞன் வெளிநாடு செல்வதற்கு பணம் தேவை என பெண்ணிடம்; கேட்ட நிலையில் குறித்த பெண் தனது வீட்டில் இருந்த சகோதரனின் பணத்தை திருடியும் தனது தங்க நகைகளை அடகு வைத்தும் அடிக்கடி அந்த இளைஞனுக்கு சுமார் 4 இலச்சம் ரூபாவரையில் பணம் அனுப்பி வந்துள்ளார்.

இந்த நிலையில் குறித்த இளைஞன் குறித்த பெண்ணிடம் அவரது 14 வயது சிறுமியான சகோதரியையும் கூட்டிவருமாறு தெரிவித்த நிலையில் செவ்வாய்க்கிழமை சகோதரியை தனியார் வகுப்புக்கு கூட்டிச் செல்வதாக தெரிவித்து வீட்டை விட்டு வெளியேறி முச்சக்கரவண்டி ஒன்றில் குறித்த விடுதிக்கு இளைஞனுடன் சென்று தங்கி இருந்துள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.  

இதில் கைது செய்யப்பட்ட சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிகப்பட்டதுடன் கைது செய்யப்பட்ட இளைஞனையும் பெண்னையும் நேற்று (07) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் முன்னிலைபடுத்தபட்டபோது இருவரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.