இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநர் வெளியிட்ட தகவல்!

0
395

இலங்கை மத்திய வங்கியை சுயாதீனமாக செயற்பட அனுமதிப்பதே தற்போதைய நெருக்கடி நிலைமையை சமாளிப்பதற்கான ஒரே வழி என புதிய ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க கூறியுள்ளார்.

இலங்கை மத்திய வங்கியின் 17ஆவது ஆளுநராக நந்தலால் வீரசிங்க இன்று கடமைகளைப் பொறுப்பேற்றார். இதன்பின் கருத்து வெளியிடும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“ நாட்டின் பொருளாதாரத்தை திட்டவட்டமான திசையில் வழிநடத்தும் ஆற்றலும் பலமும் இலங்கை மத்திய வங்கிக்கு உள்ளது.

அடுத்த சில மாதங்களில் திருப்புமுனையை எட்ட முடியும். அதற்கு அரசியல் ஸ்திரத்தன்மையும் சமூக ஸ்திரத்தன்மையும் அவசியம்.

நாட்டின் முன்னேற்றத்திற்காக அதிகபட்ச அர்ப்பணிப்புடன் செயற்படுவதோடு, உள்ளக விவகாரங்களில் அரசியல் தலையீடுகளுக்கு இடமளிக்காமல் சுதந்திரமாக செயற்பட வைக்க திட்டமிட்டுள்ளேன்.

நாட்டின் கடனை மறுசீரமைக்க கூடிய நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும். உடனடியாக யோசனைகளை கோருவதற்கு ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

யோசனைகளைப் பரிசீலித்து அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு உடனடியாக குழுவொன்றை நியமிக்க உத்தேசித்துள்ளேன்.

நாட்டின் சார்பாக தீர்மானங்களை எடுப்பதில் எந்தவொரு அரசியல் அதிகாரத்தினாலோ அல்லது அரசியல் உள்நோக்கத்திலோ செயற்படும் எண்ணம் எனக்கு இல்லை.

இலங்கை மத்திய வங்கியே இந்த நாட்டு மக்களுக்கு நேரடியாக பொறுப்புக்கூற வேண்டியுள்ளது” என்றார்.