நாடாளுமன்ற உறுப்பினர் முஷாரப் சபையில் உரையாற்றும் போது அவர் முன் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் 5000 ரூபா நாணயத்தாளை நீட்டிய சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்பட போவதாக அகில இலங்கை மக்கள் காங்ரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஸ்ஸாரப் நாடாளுமன்றில் அறிவித்தார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
இதன் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், தனது இருக்கையிலிருந்து எழுந்து வந்து, 5000 ரூபாய் தாளை முஸ்ஸாரப் முன் காண்பித்தார்.
இதன்போது சிறிது நேரம் கூச்சல் குழப்பம் ஏற்பட்டிருந்தது. அதனையடுத்து சபாநாயகர் சாணக்கியனை அவரது இருக்கையில் அமருமாறு கூறியிருந்தார்.
இந்நிலையில், 20 ஆவது திருத்த சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்து அரச தலைவருக்கு நாடாளுமன்ற அதிகாரத்தை வழங்கியதோடு, சலுகைகளையும் பெற்றுக்கொண்டு விட்டு மீண்டும் சுயாதீனமாக செயல்படுகின்றேன் என்னும் போர்வையில் அரசோடு இணைந்து ஆதரவளிப்பதே இவரது நோக்கம், அதன் காரணமாகவே முஸ்ஸாரப்புக்கு ஓர் சலுகையாக 5000 ரூபாவை சாணக்கியன் வழங்கியிருந்தார் என அவரது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும் சலுகைகளுக்காக ஆதரவளிக்கும் அரசியல் இல்லாதொழிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.