யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மக்களுக்கு முன்வைத்துள்ள கோரிக்கை!

0
439

தேவையற்ற நடமாட்டங்களைத் தவிர்த்து ஊரடங்கு காலத்தில் வெளியில் நடமாடாமல் இருப்பது சிறப்பானது என யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு நடைமுறைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு இன்று மாலை கருத்து தெரிவித்த போதே அரசாங்க அதிபர் இதனை கூறியுள்ளார்.

அரசாங்க அதிபர் மேலும் தெரிவிக்கையில்,

”இன்று மாலை 6 மணி முதல் நாளை மறுதினம் திங்கட்கிழமை காலை 6 மணி வரை நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் தேவையற்ற நடமாட்டங்களைத் தவிர்த்து ஊரடங்கு காலத்தில் வெளியில் நடமாடாமல் இருப்பது சிறப்பானது.

மிக மிக அத்தியாவசியமான தேவைகள் மற்றும் இதர அத்தியாவசியமான விடயங்களைப் பொறுத்தவரையில் அவர்கள் அந்தந்த பகுதியில் உள்ள பொலிஸ் நிலையங்களுடன் தொடர்பு கொண்டு அதன் ஊடாக கிடைக்கின்ற அறிவித்தலின் படி செயற்படலாம்.

இது தொடர்பாக மேலதிக தகவல்களை உரிய அறிவித்தல்கள் எங்களுக்கு முறையாகக் கிடைத்த பிற்பாடு பொதுமக்களுக்குத் தெரிவிப்போம். அதுவரை பொதுமக்கள் மிகவும் அமைதி காத்து ஊரடங்குச் சட்டத்தை அனுசரித்து நடக்குமாறு தயவுடன் கேட்டுக் கொள்கிறேன்” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.