சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடவிருக்கும் இலங்கை : ஆதரவு வழங்கும் அமெரிக்கா!

0
361

சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்காவின் முகவர் நிறுவனம் (USAID) புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களுக்கு கடன் வசதிகளை வழங்கும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை இன்று சந்தித்த போது அவர் இதனை கூறியுள்ளார். இந்த சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றிருந்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான பிரதிச் செயலாளர் விக்டோரியா நுலாண்டின் இலங்கை விஜயத்தின் போது அரசாங்கம் வழங்கிய ஒத்துழைப்புகளுக்க தூதுவர் பாராட்டு தெரிவித்தார்.

இலங்கையின் அண்மைக்கால பொருளாதார வீழ்ச்சிக்கான காரணங்களை விளக்கிய ஜனாதிபதி, சர்வதேச நாணய நிதியத்தை (IMF) அணுகுவதற்கு அமெரிக்காவின் ஆதரவை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்திற்குச் செல்வதற்கான அரசாங்கத்தின் முடிவைப் பாராட்டிய அமெரிக்க தூதுவர், இலங்கையின் எதிர்காலத்திற்கு இது முக்கியமானது என்றும் கூறினார்.

பொருளாதார சீர்திருத்தங்கள் எதுவாக இருந்தாலும் குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.