தியாகதீபம் திலீபனின் இறுதி வார்த்தைகளை நாடாளுமன்றில் ஞாபகப்படுத்திய சிங்கள எம்.பி!

0
319

தமிழ் மக்களின் விடியலுக்காய் யாழ் நல்லூர் ஆலய வீதியில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு உயிரிழந்த திலீபன் கூறிய வார்த்தைகளை தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் நாடளுமன்றில் நேற்று தெரிவித்திருந்தார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தமிழ் இளைஞர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்புத் தெரிவித்து 1987 செப்டம்பர் 26 ஆம் திகதி முதல் 10 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டத்தின் பின்னர் தியாகி திலீபன் உயிரிழந்தார்.

பயங்கரவாதத் தடைச் சட்டம் வடக்கில் உள்ளவர்களை மட்டுமல்ல, தெற்கிலும் உள்ளவர்களையும் ஒடுக்கும் என திலீபன் அன்று கூறியது தற்போதும் நினைவிருக்கிறதாக நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் குறிப்பிட்டார்.

இந்தச் சட்டம் இறுதியில் தமிழர்கள், முஸ்லிம்கள் மற்றும் சிங்களவர்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் என்பதை அவரது தியாகம் தங்களிடம் கூறியதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

நாடாளுமன்றில் பயங்கரவாதத் தடை தற்காலிக ஏற்பாடுகள் திருத்த சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு நேற்று திருத்தங்களுடன் நிறைவேறியது. குறித்த சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்புக்கு ஆதரவாக 86 வாக்குகளும் எதிராக 35 வாக்குகளும் நாடாளுமன்றில் கிடைத்தன.

அதில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களான பிள்ளையான் மற்றும் திலீபன் ஆகியோர் ஆதரவாக வழக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.