அமெரிக்காவிடம் இராணுவ உதவி கோரியுள்ள உக்ரைன் அதிபர் !

0
444

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்காவிடம் வரம்புகளற்ற இராணுவ உதவி கோரியுள்ளார்.

இன்றைய தினம் இடம்பெற்ற நேட்டோ உச்சி மாநாட்டில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உட்பட பிற நாட்டு முக்கிய தலைவர்களும் கலந்து கொண்டனர்.

இதில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி காணொளி மூலம் பங்கேற்றார். அதன்போது பேசிய அவர், விமான எதிர்ப்பு மற்றும் கடற்படைக்கு எதிரான ஆயுதங்கள் தேவை என்றும், ஆயுதங்கள் இல்லாமல் இதுபோன்ற போரில் உயிர்வாழ முடியுமா என்றும் கேள்வி எழுப்பியிருக்கின்றார்.

மேலும், உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் பைடனின் நிர்வாக அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், “உக்ரைனின் பாதுகாப்பிற்காக நாம் ஒரு முக்கியமான நேரத்தில் கூடியுள்ளோம்.

கிரெம்ளினின் தூண்டுதலற்ற ஆக்கிரமிப்பைக் கண்டிப்பதிலும் உக்ரைனின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கான எங்கள் ஆதரவிலும் நாங்கள் ஒன்றுபட்டுள்ளோம்.

இந்த பயங்கரமான போரை முடிவிற்கு கொண்டு வருவதற்கு ரஷ்யா மீதான தடைகளைத் தொடர்ந்து விதிப்பதில் கூட்டணி உறுதியாக உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.