முன்னர் போர் ஏதிலிகள்! இன்று பொருளாதார ஏதிலிகள்! தமிழகத்துக்கு தப்பிச்செல்லும் இலங்கை தமிழர்கள்

0
440

இலங்கை தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் பல ஆயிரக்கணக்கானோர் தமிழகத்தில் அகதிகளாக தஞ்சம் அடைய உள்ளதாகவும், எரிபொருள் தட்டுபாட்டால் வரமுடியாமல் அவதியுற்று வருவதாக தமிழகத்திற்கு அகதிகளாக சென்றவர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து நேற்று காலை முதல் இரவு வரை 16 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தனுஷ்கோடிக்கு சென்றுள்ளனர். மேலும் பலர் அகதிகளாக தனுஸ்கோடிக்கு வரக்கூடும் என்பதால் சர்வதேச கடல் எல்லை பகுதியில் கண்காணிப்பை தீவிரப்படுத்த கடல் பாதுகாப்பு அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக இந்திய தகவல் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யுத்தத்தால் உயிர்க்கு பயந்து அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம் அடைந்த நிலையில், தற்போது பட்டிணிச்சாவுக்கு பயந்து நடுக்கடலில் சுமார் 37 மணி நேரம் உயிருக்கு போராடி குழந்தைகளுடன் தனுஸ்கோடிக்கு வவுனியாவிலிருந்து அகதிகளாய் இலங்கை மக்கள் சென்றுள்ளனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சி காரணமாக உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களான, குழந்தைகளுக்கான பால் பவுடர், அரிசி, பருப்பு, கோதுமை, மண்ணெண்ணெய், டீசல், பெட்ரோல் உள்ளிட்ட பொருட்களின் கடும் விலை உயர்வு மற்றும் தட்டுபாடு காரணமாக இலங்கையில் வாழும் மக்கள் தமிழகத்திற்கு அகதிகளாக செல்லத் தொடங்கியுள்ளனர்.

இந் நிலையில், திங்கட்க்கிழமை காலை 9 மணியளவில் மன்னார் மாவட்ட கடற்கரையில் இருந்து தனது சொந்த பைபர் படகில் ஐந்து குழந்தைகள், மூன்று பெண்கள், இரண்டு ஆண்கள் என இரண்டு குடும்பத்தை சேர்ந்த 10 பேர் தனுஸ்கோடிக்கு சென்றுள்ளனர்.

நடுக்கடலில் படகின் இஞ்சினில் ஏற்பட்ட பழுது காரணமாக கடும் வெயிலில் உணவு, தண்ணீர் இன்றி சுமார் 37 மணி நேரத்திற்கும் மேலாக குழந்தைகளுடன் நடுக்கடலில் தத்தளித்தளித்த நிலையில் பல மணி நேர முயற்சிக்கு பின் இஞ்சின் சரி செய்து நேற்று செவ்வாய்கிழமை இரவு 8 மணியளவில் தனுஷ்கோடி வடக்கு பாலம் மீன்பிடி துறைமுகத்தை சென்றடைந்துள்ளனர்.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்கள்,

இலங்கையில் நடந்த உள்நாட்டு யுத்தகாலங்களில் உறவுகளையும் உடமைகளையும் இழந்து உயிர் பிழைத்தால் போதும் என 1990 ஆம் ஆண்டு தமிழகத்திற்கு அகதிகளாய் வந்து போர் முடிந்த பின் 2012ல் மீண்டும் இலங்கைக்கு புறப்படுச் சென்றோம்.

தற்போது உணவு பஞ்சத்தால் பட்டினிசாவுக்கு பயந்து குழந்தைகளோடு மீண்டும் இரண்டாவது முறையாக அகதிகளாக தனுஸ்கோடி வந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.  

முதலாம் இணைப்பு

இலங்கையில் இருந்து தமிழர்கள் தமிழகத்துக்கு ஏதிலிகளாக செல்லும் நிலை மீண்டும் ஆரம்பித்துள்ளது.

நேற்று மாத்திரம் 16 பேர் தமிழகம் தனுஸ்கோடிக்கு சென்றநிலையில் அங்கு தடுத்துவைக்கப்பட்டனர்.

இவர்கள் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்களாவர்.

முன்னர் இலங்கையில் போர்க் காரணமாக தப்பிச்சென்ற இலங்கை தமிழர்கள் தற்போது, பொருளாதார நெருக்கடி காரணமாக இந்தியாவிற்கு தப்பிச் செல்ல ஆரம்பித்துள்ளனர்.

இந்திய ஊடக தகவல்களின்படி, இலங்கை தேசத்தை விட்டு வெளியேறி தனுஸ்கோடி மணல் திட்டில் தரையிறக்கப்பட்டிருந்த மூன்று குழந்தைகள் உட்பட ஆறு இலங்கைத் தமிழர்கள் செவ்வாய்க்கிழமை அதிகாலை இந்திய கடலோர காவல்படை வீரர்களால் மீட்கப்பட்டனர்.

இதேவேளை தனுஸ்கோடி அருகே உள்ள பாலம் என்ற இடத்தில் மேலும் 10 இலங்கைத் தமிழர்கள் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இலங்கையில் எரிவாயு கொள்கலனின் விலை (இலங்கை ரூபாய்) 1,900 இலிருந்து 4,000ரூபாவாக அதிகரித்துள்ளது மற்றும் அரிசியின் விலை கிலோ ஒன்று 130 இலிருந்து 230 ரூபாவாக உயர்ந்துள்ளது.

ஒரு முட்டையின் விலை 35 ரூபாய் என்று தமிழகத்துக்கு தப்பிச்சென்ற ஏதிலிகள் கூறியிருப்பதாக தமிழக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.