மக்களை மறந்து அமைச்சுப் பதவிக்காக அலைபவர்களுக்கு மக்கள் விரைவிலேயே பதில் கொடுப்பார்கள்-வேலுகுமார்

0
359

“மலையக மக்கள் பட்டினியில் வாடும் நிலைமையிலும், அமைச்சுப் பதவிக்காகப் பேரம் பேசும் ஆளும் தரப்பே இன்று மலையகத்தில் உள்ளது.” எனக் கட்சி தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் நிதி செயலாளர், கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்துள்ளார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் அத்தியாவசிய பொருட்களுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மக்கள் நீண்ட வரிசையில் பொருட்களுக்காக நிற்கும் நிலைமை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. பொருட்களுக்கான விலைகள் தொடர்பாக எந்தவித கட்டுப்பாடும் அற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.

வியாபாரிகள் வைப்பதே, பொருட்களுக்கான விலை என்ற நிலைமை தோன்றியுள்ளது. இந்நெருக்கடியான சூழ்நிலையில் மலையக தோட்டத் தொழிலாளர்களுக்காக முன்னிற்க வேண்டியவர்கள், மலையக மக்கள் பட்டினியில் வாடும் நிலைமையிலும், அமைச்சுப் பதவிக்காகப் பேரம் பேசுபவர்களாகவே உள்ளனர்.

இன்றைய அரசாங்கத்தின் ஆரம்பம் முதலே, மலையக தோட்டத் தொழிலாளர்களுக்கு, அடிக்கு மேல் அடி விழுந்து வருகின்றது. தோட்ட நிர்வாகங்களின் அதிகார துஷ்பிரயோகம் என்றும் இல்லாதவாறு அதிகரித்துள்ளது.

தேவையான நாட்கள் வேலை வழங்குவதில்லை. திட்டமிட்டு வேலை நாட்களைக் குறைப்பது, வேலை செய்ய வேண்டிய அளவை அதிகரிப்பது, என்பன வழமையான பிரச்சினையாக மாறியுள்ளது. ரூபா ஆயிரம் நாட்கூலிக்கான தீர்வு இல்லை.

வருமானம் நாளுக்கு நாள் குறைந்தே வருகின்றது. இச்சூழலில் மக்கள் ஒரு வேளை உணவையாவது உட்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இன்று மலையக மக்கள் நாளாந்தம் அதிகம் பயன்படுத்தும் கோதுமை மாவிற்கும், மண்ணெண்ணெய்க்கும் பாரிய தட்டுப்பாடு மலையக தோட்ட பிரதேசங்கள் எங்கும் நிலவுகின்றது.

பொருட்களை வாங்க போலிகளுக்குப் போவதா? இல்லை, தொழிலுக்குப் போவதா எனத் திண்டாடும் நிலைக்குத் தொழிலாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலைமைக்கு ஆளும் தரப்பிலிருந்தால் தான் அனைத்தையும் சாதிக்கலாம் எனக் கூறி, எமது மக்களின் வாக்குகளைப் பெற்றவர்கள் பொறுப்பு கூற வேண்டும்.

ஆனால் மக்களின் இந்நிலைமை தொடர்பாக எந்த வித அக்கறையும் அவர்களுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. எமது மக்களின் பிரச்சினைகளைக் கூறி, பேரம் பேசி, மக்களைக் காப்பாற்ற வேண்டியவர்கள், இன்று மக்களை நாடு வீதிகளில் விட்டுவிட்டு அமைச்சுப் பதவிக்காக அலைந்து திரியும் நிலை ஏற்பட்டுள்ளது.

அதற்காக அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் நிலை காண முடிகின்றது. மக்கள் இந்த அரசாங்கத்தையே விரட்டி அடிக்க பார்த்துக்கொண்டிருக்கும் நிலையில், மக்களை மறந்து அமைச்சுப் பதவிக்காக அலைபவர்களுக்கு மக்கள் விரைவிலேயே பதில் கொடுப்பார்கள்” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.