இலங்கைக்கு வருகை தரவுள்ள தாய்லாந்து பிரதமர்!-ஜி.எல். பீரிஸ் தெரிவிப்பு

0
406

தாய்லாந்து பிரதமர் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்று வெளி விவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இலங்கை, இந்தியா, தாய்லாந்து உட்பட 7 நாடுகள் அங்கம் வகிக்கும் பிம்ஸ்டெக் அமைப்பின் அரச தலைவர்கள் மாநாடு இம்முறை இலங்கையில் நடைபெறும்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நடைபெறவுள்ள இம்மாநாட்டில் தாய்லாந்து பிரதமர், கொழும்பு வந்து, அடுத்த தலைமைப் பதவியை ஏற்பார்.

ஏனைய தலைவர்கள் ‘ஒன்லைன்’ மூலம் மாநாட்டில் பங்கேற்பார்கள். அத்துடன், பிம்ஸ்டெக் அமைப்பில் உள்ள நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுக்கு இடையிலான சந்திப்பு மார்ச் 29ஆம் திகதி பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறும்” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.