ஆறு கிலோ தங்கத்துடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது!

0
344

சட்டவிரோதமாக கடல் வழியாக இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படவிருந்த சுமார் ஆறு கிலோ தங்கத்துடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ (Nihal Thalduwa) தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற பேருந்து ஒன்றை கொழும்பு ஆமர் வீதியில் சோதனையிட்ட போது வெல்லம்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 38 வயதான நபர் தங்கத்துடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில், இந்த தங்கம் கடல் வழியாக இந்தியாவுக்கு கடத்திச் செல்லப்படவிருந்த தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து இந்த கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு நபர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைப்பற்றப்பட்டுள்ள தங்கத்தின் பெறுமதி 12 கோடி ரூபாவிற்கும் மேல் என தெரியவந்துள்ளது.

தங்கம் எங்கிருந்து கிடைத்தது, எவ்வளவு காலம் இந்த கடத்தல் நடைபெற்று வருகிறது என்பது குறித்து காவல் துறையினர் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.