இலங்கை இந்தியாவிடமிருந்து 1 பில்லியன் அமெரிக்க டொலர் கடனைப் பெற்றநிலையில் மீண்டும் சீனாவிடம் உதவி கோரிக்கை !

0
372

அந்நியச் செலாவணி நெருக்கடியை அடுத்து,இந்திய உதவியை பெற்றுக்கொண்ட இலங்கை தற்போது சீனாவிடம் மீண்டும் உதவியை கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடன் கொடுப்பனவுகளை தாமதப்படுத்தல் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள், மூலப்பொருட்களை இறக்குமதி செய்வதற்கான கடன் ஏற்பாடுகளுக்காக மேலதிக நிதி என்ற உதவிகளையே இலங்கை சீனாவிடம் கோரியுள்ளது.

இலங்கை இந்த ஆண்டு மாத்திரம், சீன வங்கிகளுக்கு 100 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு அதிகமான தொகையை கடன் தவணையாக செலுத்த வேண்டியுள்ளது.

இந்தநிலையில், நாடு தற்போதைய நெருக்கடியிலிருந்து வெளியேறும் வரை இந்த கொடுப்பனவுகளை புதிய திருத்தப்பட்ட கொடுப்பனவு முறைகளுக்கு மாற்றும் கோரிக்கையை அரசாங்கம் சீனாவிடம் முன்வைத்துள்ளது

அதுமட்டுமின்றி, உள்ளூர் தொழில்களுக்கு தேவையான மூலப்பொருட்களை சீனாவில் இருந்து இறக்குமதி செய்யும் தனியான கடன் ஏற்பாட்டையும் இலங்கை அரசாங்கம்;, சீனாவிடம் கோரியுள்ளது.

இந்த தகவலை இலங்கையில் உள்ள சீனத் தூதரகம் உறுதிச்செய்துள்ளது.

ஏற்கனவே அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக இலங்கை இந்தியாவிடமிருந்து 1 பில்லியன் அமெரிக்க டொலர் கடனைப் பெற்றுள்ளது.

இதற்கான உடன்படிக்கை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் புதுடில்லியில் கையெழுத்தானது.

அத்துடன் எரிபொருள் கொள்வனவுக்காக 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனையும் இலங்கை பெற்றுள்ளது.