இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்திக்கும்! அன்றே கணித்த ரணில்

0
307

இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்திக்கும் என 2021ஆம் ஆண்டின் ஆரம்பத்திலேயே முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க எச்சரிக்கை விடுத்திருந்தார்.

கடந்த வருடம் ஊடக நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட ரணில் விக்ரமசிங்க பேசிய விடயங்கள் தற்போது அதிகம் பேசப்பட்டு வருகின்றன.

சர்வதேச நாணய நிதியத்திடம் தற்போதைய அரசாங்கம் உடனடியாக செல்ல வேண்டும் என ரணில் கடந்த வருடம் குறிப்பிட்டிருந்தார்.

நாட்டை சர்வதேச நாணய நிதியத்திடம் சிக்க வைக்க முயற்சிக்கின்றீர்களா என ஊடகவியலாளர் ரணிலிடம் வினவிய போது,

நாட்டில் கடுமையான நிதி நெருக்கடி ஏற்படும். அரச ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத நிலைமை ஏற்படும். இதனாலேயே எங்கள் ஆட்சியின் போதே ஊழியர்கள் புதிதாக இணைத்துக் கொள்ளப்படும் நடவடிக்கை குறைக்கப்பட்டது. இன்னும் ஒரு சில மாதங்களில் ஓய்வூதியம் வழங்க முடியாமல் போகும் என்பதனை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அரச ஊழியர்களுக்கு சம்பள ஓரளவு கொடுத்து விடலாம். எனினும் முழுமையாக ஓய்வூதியம் கொடுக்க முடியாத நிலைமை ஏற்படும்.

எங்கள் அரசாங்கத்தின் போது இவ்வாறான நெருக்கடி ஏற்படவில்லை. இதனாலேயே தற்போதைய அரசாங்கத்தை சர்வதேச நாணய நிதியத்திடம் செல்ல வேண்டும் என கூறினேன்.

எங்களுக்கு பொருளாதாரத்தை கட்டமைத்துக் கொண்டால் நெருக்கடி நிலையில் இருந்து நாட்டை மீட்கலாம். தாமதமாகினால் மோசமான நிலைமையை நோக்கி செல்ல நேரிடும்.

சர்வதேச நாணய நிதியம் என்பது பணமில்லாத போது செல்ல கூடிய மாற்று வழியாகவே உள்ளது. சர்வதேச நாணய நிதியத்திடம் செல்வதென்பது நாட்டை ஒரு இடத்தில் சிக்க வைப்பதல்ல. பொருளாதாரத்தை மீட்டு, அந்நிய செலாவனியை அதிகரிக்கும் விடயமாகும்  என ரணில் குறிப்பிட்டார்.

சாதாரண காய்ச்சலுக்கு மருத்துவமனைக்கு ஏன் செல்ல வேண்டும் வீட்டிலேயே கொத்தமல்லி குடித்து விட்டு இருக்கலாம். சாதாரண காய்ச்சல்களுக்கு மருத்துவமனைக்கு சென்றால் நோய் பெரிதாகிவிடும் என மத்திய வங்கி ஆளுநர் கூறினாரே என ரணிலிடம் ஊடகவியலாளர் வினவியுள்ளார்.

அப்படி சாதாரண காய்ச்சல் என எண்ணினால் தீவிர சிகிச்சை பிரிவிற்கே செல்ல நேரிடும். ஒரு பீப்பாய் எண்ணெய் 100 டொலராக அதிகரித்தால் என்ன செய்வது. அந்த அச்சம் எனக்கு இப்போதே உள்ளது.

சர்வதேச ரீதியில் அதிகரிப்புகள் ஏற்பட்டால் தேசிய ரீதியில் எங்களால் மீண்டு வருவது கடினமாக இருக்கும் என ரணில் அந்த நேர்காணலில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.