தெருவில் வாழும் பாகிஸ்தானியர் ஒருவருக்கு சுவிஸ் வங்கியில் 4 பில்லியன்:

0
397

பாகிஸ்தானின் ஏழைகள் குடியிருக்கும் சேரிப்பகுதி ஒன்றில் வாழும் ஒருவரது பெயரில் சுவிஸ் வங்கியில் 4 பில்லியன் ரூபாய் இருப்பதாக வெளியான செய்தியைக் கேட்டு அவரே வாயடைத்துப் போய் நிற்கிறார்!

அவர் பெயர் முகமது ஜாவேத். ஜாவேத் பெயரில் பிரபல சுவிஸ் வங்கியான Credit Suisse வங்கியில் இரண்டு வங்கிக்கணக்குகள் உள்ளன.

ஆனால், ஜாவேதுக்கு பாகிஸ்தானில் எந்த வங்கிக் கணக்கும் கிடையாது, அவர் இதுவரை பாகிஸ்தானை விட்டு வெளியேறி எந்த வெளிநாட்டுக்கும் சென்றதும் கிடையாது.

ஆனால், 2003ஆம் ஆண்டு, அவருக்கு 26 வயது இருக்கும்போது, அவர் பெயரில் Credit Suisse வங்கியில் ஒரு கணக்கு துவங்கப்பட்டுள்ளது. அப்போது அவருக்கு பாஸ்போர்ட் கூட கிடையாது.

2005ஆம் ஆண்டு பாஸ்போர்ட் ஒன்றிற்கு விண்ணப்பித்து பாஸ்போர்ட் பெற்றிருக்கிறார் ஜாவேத். ஆனால், அவர் பாஸ்போர்ட்க்கு விண்ணப்பிப்பதற்கு முன், மீண்டும் அவர் பெயரில் Credit Suisse வங்கியில் இரண்டாவது கணக்குத் துவங்கப்பட்டுள்ளது.

ஜாவேதின் முதல் வங்கிக்கணக்கில் 3.4 பில்லியன் ரூபாயும், இரண்டாவது வங்கிக் கணக்கில் 401 மில்லியன் ரூபாயும் செலுத்தப்பட்டுள்ளன.

அதாவது, யாரோ ஒருவர் ஜாவேத் பெயரில் கணக்குகள் துவங்கி பணத்தை போட்டுவந்துள்ளார். ஜேர்மன் செய்தித்தாள் ஒன்றிற்கு இந்த விடயம் லீக் செய்யப்பட்டதையடுத்து விசாரணைகள் துவங்க, இரண்டு கணக்குகளும் 2006ஆம் ஆண்டு மூடப்பட்டுள்ளன.

பாகிஸ்தானிலுள்ள Gulberg Lahore என்ற இடத்தில், சாக்கடைகள் ஓடும் பகுதியில் வாழ்ந்து வருகிறார் ஜாவேத். அந்த சேரிப்பகுதியில் அவர் வாழ்ந்த வீட்டைக்கூட அரசு இடித்துவிட, தன் தாயுடன் அதே இடத்தில் ஒரு கூரையின் கீழ் வாழ்கிறார் ஜாவேத்.

தன் பெயரில் இவ்வளவு பணம் சுவிஸ் வங்கியில் போடப்பட்டிருக்கும் செய்தி கேட்டு ஜாவேத் வாய் பிளந்து நிற்க, அவரது தாயாகிய பர்வீன் அக்தரோ, ஜாவேதுக்கு சாப்பட்டுக்கே வழியில்லை, இதில் அவனது மனைவி வேறு கர்ப்பமாக இருக்கிறாள். அவளுக்கான செலவுகளையே ஜாவேதின் மாமனார் வீட்டில்தான் கவனித்துக்கொள்கிறார்கள்.  

அப்படி எங்களுக்கு அவ்வளவு பணம் இருந்தால், நாங்களும் அவர்களைப் போல பெரிய மாளிகையில் வாழமாட்டோமா என தூரத்தில் இருக்கும் அரசியல்வாதிகளின் வீட்டைக் காட்டுகிறார் பர்வீன்.

ஆம், அப்படிப்பட்ட அரசியல்வாதிகளும், அரசு அதிகாரிகளும்தான் இப்படி சட்ட விரோதமாக பணத்தை சுவிஸ் வங்கிகளில் போட்டு வைத்திருக்கிறார்கள். ஏழைகள் வயிற்றில் அடிப்பது போதாதென்று இப்போது அவர்கள் அடையாளத்தையும் திருடி, அவர்கள் பெயரிலேயே வங்கியில் பணமும் போட்டு வைத்திருக்கிறார்கள் அவர்கள்.

1977ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் பிறந்தவர் ஜாவேத். அந்த நாளில் முகமது ஜாவேத் என்ற பெயரில் பிறந்தவர் இவர் மட்டும்தான். அத்துடன், சுவிஸ் வங்கியில் கணக்குத் துவக்க பாஸ்போர்ட் தேவை. ஆனால், ஜாவேத் பாஸ்போர்ட் எடுப்பதற்கு முன்பே சுவிஸ் வங்கியில் இரண்டு கணக்குகளும் துவக்கப்பட்டுவிட்டன. அப்படியிருக்க, அவரது அடையாளங்கள் எப்படி திருடப்பட்டன என்பது மர்மமாகவே நீடிக்கிறது.