வெளிநாடுகளுக்குச் செல்ல விரும்பும் சிங்கப்பூரர்களுக்கு தற்போது கொவிட்-19 தடுப்பூசிகள் போட முடியாது: அமைச்சர்

0
524

தனிப்பட்ட காரணங்களுக்காக வெளிநாடுகளுக்குச் செல்ல விரும்பும் சிங்கப்பூரர்களுக்கு தற்போது கொவிட்-19 தடுப்பூசிகள் வழங்க முடியாது என்று சுகாதார மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

தற்போது தடுப்பூசிகள் குறிப்பிட்ட அளவில் மட்டுமே இருப்பதால் அவற்றைத் தேர்ந்தெடுக்கப்பட்ட குழுக்களுக்கு வழங்க முன்னுரிமை அளிக்கப்படுவதே அதற்குக் காரணம் என்று அவர் விளக்கமளித்தார்.

இதுகுறித்து 12 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த டாக்டர் ஜனில், “தனிப்பட்ட காரணங்களுக்காக வெளிநாடு செல்ல விரும்பும் சிங்கப்பூரர்கள், முன்கூட்டியே தடுப்பூசி போட்டுக்கொள்ள விரும்புவதை எங்களால் புரிந்துகொள்ள முடிகிறது.

“என்றாலும், தடுப்பூசிகள் குறிப்பிட்ட அளவில் மட்டுமே இருப்பதால் அவற்றைச் சுகாதார, முன்களப் பணியாளர்கள் மற்றும் மூத்தோருக்கு முதலில் போட முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

“எனவே, இத்தகைய குழுக்களைத் தவிர்த்து மற்றவர்களுக்குத் தற்போது தடுப்பூசி வழங்க இயலாது. இதுகுறித்து சிங்கப்பூரர்களின் புரிந்துணர்வை நாங்கள் நாடுகிறோம்,” என்று விவரித்தார்.

“தடுப்பூசி விநியோகத்தில் கூடுதல் தெளிவு கிடைத்தவுடன் இத்தகைய தனிநபர்கள் முன்கூட்டியே தடுப்பூசி போட்டுக்கொள்வதை அனுமதிப்பது  குறித்து நாங்கள் பரிசீலிப்போம். அதுபற்றிய கூடுதல் விவரங்களை நாங்கள் அந்தச் சமயத்தில் அறிவிப்போம்,” என்றார் அவர்.

மக்கள்தொகையில் மற்ற பிரிவினருக்கான தடுப்பூசித் திட்டம் குறித்த கூடுதல் விவரங்கள் பிந்தைய தேதியில் அறிவிக்கப்படும்.

சிங்கப்பூரின் தடுப்பூசித் திட்டம் நல்ல முன்னேற்றம் கண்டிருப்பதாக குறிப்பிட்ட டாக்டர் ஜனில், சிங்கப்பூருக்கு தடுப்பூசிகள் வரவழைக்கப்படுவதன் பொருட்டு அவற்றை மொத்த மக்கள்தொகைக்கும் வழங்கும் முயற்சிகள் எடுக்கப்படுவதால் சிங்கப்பூரர்கள் பொறுமையுடன் இருக்குமாறு கேட்டுக்கொண்டார்.

‘ஃபைசர்-பயோஎன்டெக்’, ‘மொடர்னா’, ‘சினொவெக்’ ஆகிய தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்து தடுப்பூசிகளை வாங்குவதற்கான உடன்பாடுகளில் சிங்கப்பூர் கையெழுத்திட்டு இருப்பதையும் மற்ற சில  தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றுக்கொண்டு இருப்பதையும் டாக்டர் ஜனில் சுட்டினார்.

இந்நிலையில், ‘ஃபைசர்-பயோஎன்டெக்’ தடுப்பூசிகளை இங்கு வரவழைப்பதில் தாமதம் ஏற்படும் என்று அவர் தெரிவித்தார். ‘ஃபைசர்’  நிறுவனத்தின் தடுப்பூசி தயாரிப்பு ஆலையில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெறுவதே அதற்குக் காரணம்.

எனினும், அனைத்து சிங்கப்பூர்களுக்கும் நீண்டகால குடியிருப்பாளர்களுக்கும் இவ்வாண்டு இறுதிக்குள் தடுப்பூசி போடும் இலக்கை எட்ட, தடுப்பூசி விநியோகம் தொடர்ந்து அணுக்கமாகக் கண்காணிக்கப்படும் என்றார் அவர்.