டக்ளஸா?அங்கஜனா? யாருக்கு அதிகாரம்!

0
472

 

இலங்கை போக்குவரத்துச் சபையின் வடபிராந்திய பிரதான முகாமையாளராக நியமிக்கப்பட்ட செல்லத்துரை குணபாலச்செல்வனின் நியமனத்தை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றைய தினம் வடக்கு மாகாணத்தில் இ.போ.ச தொழிற்சங்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் குதித்திருப்பதாக அறிவித்துள்ளன.

அங்கயன் இராமநாதனின் தலையீட்டால் அவரது நியமனம் இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவரால் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தொழிற்சங்கங்கள் குற்றஞ்சுமத்தியுள்ளன.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் இதனை தெரிவித்த அவர்கள் சாவகச்சேரி மீசாலையைச் சேர்ந்த செல்லத்துரை குணபாலச்செல்வம், இலங்கை போக்குவரத்துச் சபையில் நீண்ட கால சேவை புரியும் அனுபவமிக்கவர். கடந்த ஆட்சியில் தொழிற்சங்கங்கள் மேற்கொண்ட எதிர்ப்பு நடவடிக்கையால் அவர் யாழ்ப்பாணம் சாலை முகாமையாளர் பதவியிலிருந்து கொழும்புக்கு மாற்றப்பட்டார்.

மும்மொழித் திறமையுடைய அவர், கடந்த காலங்களில் பல ஊழியர்களின் பதவிநிலை பிரச்சினைகளை சீர் செய்து வழங்கியிருந்தார்.

இந்த நிலையில் செல்லத்துரை குணபாலச்செல்வம், வடபிராந்திய பிரதான முகாமையாளராக நேற்றுமுன்தினம் நியமனம் வழங்கப்பட்டது.

அவருக்கு உரிய நியமனக் கடிதத்தை கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கிவைத்த நிலையில் இன்று முற்பகல் பதவி ஏற்க ஏற்பாடாகி இருந்தது.

இந்த நிலையில் செல்லத்துரை குணபாலச்செல்வத்தின் நியமனத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அதனை தடுத்தே தீருவேன் என்றும் அங்கயன் இராமநாதன் தெரிவித்திருந்தார்.

தமிழர் ஒருவர் நியமிக்கப்படுவதை நிறுத்தும் செயலாக அங்கயன் இராமநாதன் செயற்படுவதை ஏற்க முடியாது என வடபிராந்தியத்தின் 7 சாலைகளின் தொழிற்சங்கங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டதுடன் இன்றைய போராட்டத்திற்கு தீர்வு கிட்டாவிடின் போராட்டம் தொடருமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் திடீரென முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தினால் பாடசாலை மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.