டக்ளஸ் – அங்கஜன் அடிபிடி..! தமிழ் அதிகாரியின் பதவி பறந்தது

0
489

அண்மையில் நியமனம் செய்யப்பட்டிருந்த நிலையில் குறித்த நியமனம் இரத்து செய்யல்படுவதாக நேற்று இரவு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இ.போ.ச தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு போராட்டங்களை இன்று முதல் நடத்தும் என எதிர்வுகூறப்பட்டிருக்கின்றது.

வடபிராந்தியத்தில் குறைந்தளவானோரைக் கொண்ட கட்சி ஒன்றின் நடவடிக்கையால் அவரது நியமனம் இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவரால் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

சாவகச்சேரி மீசாலையைச் சேர்ந்த செல்லத்துரை குணபாலச்செல்வம், இலங்கை போக்குவரத்துச் சபையில் நீண்ட கால சேவை புரியும் அனுபவமிக்கவர்.

கடந்த ஆட்சியில் தொழிற்சங்கங்கள் மேற்கொண்ட எதிர்ப்பு நடவடிக்கையால் அவர் யாழ்ப்பாணம் சாலை முகாமையாளர் பதவியிலிருந்து கொழும்புக்கு மாற்றப்பட்டார்.

மும்மொழித் திறமையுடைய அவர், கடந்த காலங்களில் பல ஊழியர்களின் பதவிநிலை பிரச்சினைகளை சீர் செய்து வழங்கியிருந்தார்.

இந்த நிலையில் செல்லத்துரை குணபாலச்செல்வம், வடபிராந்திய பிரதான முகாமையாளராக நேற்றுமுன்தினம் நியமனம் வழங்கப்பட்டது.

அவருக்கு உரிய நியமனக் கடிதத்தை கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்று வழங்கிவைத்த நிலையில் நாளை முற்பகல் பதவி ஏற்க ஏற்பாடாகி இருந்தது.

இந்த நிலையில் செல்லத்துரை குணபாலச்செல்வத்தின் நியமனத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அதனை தடுத்தே தீருவேன் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், தொழிற்சங்கத்துக்கு உறுதியாகத் தெரிவித்திருந்தார்.

அதனால் வடபிராந்தியத்தின் 7 சாலைகளினதும் தொழிற்சங்கள் இன்று காலை கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை நேரில் சந்தித்து எஸ்.குணபாலச்செல்வத்தின் நியமனத்தை உறுதி செய்யுமாறு வலியுறுத்தினர்.

அவரது நியமனத்தை நிறுத்தினால் வடபிராந்தியத்தின் 7 சாலைகளின் ஒன்றிணைந்த தொழிற்சங்க நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் தெரிவித்தனர்.

எனினும் நியமனம் நிறுத்தப்படாது என உறுதியளித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பணிப்புறப்பணிப்பில் ஈடுபட அவசியம் ஏற்படாது என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் வடபிராந்திய பிரதான முகாமையாளராக செல்லத்துரை குணபாலச்செல்வத்தை நியமித்தமையை இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவருக்கு போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழர் ஒருவர் நியமிக்கப்படுவதை நிறுத்தும் செயலாக அரசியல்வாதி ஒருவர் செயற்படுவதை ஏற்க முடியாது என வடபிராந்தியத்தின் 7 சாலைகளின் தொழிற்சங்கங்களும் நாளை போராட்டத்தில் குதிக்கும் என அறிய முடிகிறது.

அதனால் இ.போ.ச பேருந்து சேவைகள் வடக்கில் இடம்பெறுமா என்பது நாளையே தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.