பல்கலைக்கழகங்களுக்கு இணைக்கும் மாணவர்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க தீர்மானம்

0
399

பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக்கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிப்பதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு கவனம் செலுத்தியுள்ளது.

பிரதமரின் செயலாளர் தலைமையில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் போது இது தெரியவந்தது.

2019 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர் தர பரீட்சையின் பழைய மற்றும் புதிய பரிந்துரை வெட்டுப்புள்ளிகள் என இரண்டு விதமாக பல்கலைக்கழங்களுக்கு மாணவர்கள் தெரிவுசெய்யப்படுகின்றமை பிரச்சினையை தோற்றுவித்துள்ளது.

பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் வழிமுறைகள் மற்றும் சட்ட திட்டங்களை சிக்கலை எதிர்நோக்கும் மாணவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றும் வகையில் முன்னெடுக்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

அதன் பிரகாரம் மாணவர்கள் தாக்கல் செய்த மேன்முறையீடுகளை கண்காணித்து பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை விரைவாக எடுக்கவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார்.

பல்கலைக்கழகங்களை தவிர சேர்த்துக்கொள்ள எதிர்பார்க்கப்படும் மாணவர் எண்ணிக்கை தொடர்பாக தகவல்களை எதிர்வரும் பெப்ரவரி 8 ஆம் திகதி அறிவிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.