ஜெயலலிதா இறந்த பிறகு ஆட்டம் அதிகம்! – நில அபகரிப்பு சர்ச்சையில் தி.நகர் எம்.எல்.ஏ சத்யா!

0
459
death Jayalalithaa - MLA Sathya land dispute india tamil news

தி.நகர் எம்.எல்.ஏ சத்யா மீது அதிருப்தி குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்கள் தொகுதி மக்கள். `நில அபகரிப்பு, கமிஷன் என அத்துமீறிக் கொண்டிருக்கிறார் எம்.எல்.ஏ போலீஸ் துணையோடு அனைத்தும் நடப்பதால், அவரை எதிர்த்து யாராலும் கேள்வி கேட்க முடியவில்லை’ என்கின்றனர் அச்சத்துடன்.death Jayalalithaa – MLA Sathya land dispute india tamil news

சென்னை வடபழனி நெற்குன்றம் லேன் பகுதியில் `பாலாஜி சீனிவாஸ்’ என்ற பெயரில் பங்களா வீடு உள்ளது. இந்த வீட்டில் நீண்டகாலமாக வசித்து வந்தது ஒரு குடும்பம்.

இந்த வீட்டை நான்கு கோடி ரூபாய்க்கு வாங்கியிருக்கிறார் பாதிரியார் இஸ்ரேல் ஜெபராஜ் என்பவர்.

இந்த வீட்டுக்கு அருகில்தான் தென்சென்னை அ.தி.மு.க வடக்கு மாவட்டச் செயலாளரும் தி.நகர் எம்.எல்.ஏ-வான சத்யாவின் வீடு உள்ளது.

இப்போது இந்த வீட்டின் காரிடாரில் சத்யாவுக்குச் சொந்தமான கார் நின்றுகொண்டிருக்கிறது.

என்ன நடந்தது?

“வடபழனியின் பிரதான சாலையில் பாதிரியார் இஸ்ரேல் ஜெபராஜுக்குச் சொந்தமாக தேவாயம் ஒன்று இருந்தது. அதை ஒன்பது கோடி ரூபாய்க்கு விற்றுவிட்டார்.

அப்படி வந்த பணத்தில்தான் இந்த வீட்டை வாங்கினார். இந்த விவரம் சத்யாவுக்குத் தெரியாது. ஒருநாள் ஞாயிற்றுக்கிழமை அன்று அந்த வீட்டில் சிலர் கூடி, ஜெபம் செய்துள்ளனர்.

அந்தச் சத்தத்தைக் கேட்டு வெளியே வந்த சத்யா, `யார் நீங்க… இங்க ஏன் ஜெபம் பண்றீங்க?’ எனக் கேட்டிருக்கிறார்.

அதற்குப் பாதிரியார் ஜெபராஜ், `நான் காசு கொடுத்து இந்த இடத்தை வாங்கியிருக்கேன்’ எனக் கூற, `இங்க எல்லாம் ஜெபம் பண்ணக் கூடாது’ எனச் சத்தம் போட, `நான் பிரேயர் பண்ணக் கூடாதுன்னு நீங்க எப்படிச் சொல்லலாம்?’ என எதிர்க்கேள்வி கேட்டிருக்கிறார் பாதிரியார்.

இதனால் கடுப்பான சத்யாவின் ஆட்கள், பாதிரியாரிடம் சண்டைக்கு வந்துள்ளனர்.

இதையடுத்து, வடபழனி ஸ்டேஷனில் புகார் கொடுக்கச் சென்றார் பாதிரியார்” என விவரித்த சாரோன் சர்ச் ஊழியர் ஒருவர், `போலீஸாரும் சம்பவம் நடந்த இடத்தில் விசாரித்துள்ளனர்.

சத்யா சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதால், `இரண்டு பேரும் பேசி முடிவெடுத்துக் கொள்ளுங்கள்’ எனக் கூறிவிட்டுக் கிளம்பிவிட்டனர்.

இதன் பிறகு, பாதிரியார் வாங்கிய வீட்டுக்குப் பூட்டு போட்டுவிட்டார் சத்யா. அந்த வீட்டில் தன்னுடைய காரையும் நிறுத்திவிட்டார்.

`இதற்கு மேல் போராட முடியாது’ என முடிவெடுத்த பாதிரியார், ‘இந்த இடத்தை நீங்களே வாங்கிக்கொள்ளுங்கள். அதுவரையில் ஞாயிற்றுக்கிழமைதோறும் பிரேயர் நடத்துவதற்கு மட்டும் அனுமதி கொடுங்கள்’ எனக் கேட்டிருக்கிறார்.

`சரி ஊழியம் பண்ணிட்டு, சாவியை என்னிடம் கொடுத்துவிட வேண்டும்’ என்ற நிபந்தனையோடு அவருக்கு அனுமதி கொடுத்திருக்கிறார் சத்யா.

வீட்டோடு பத்திரப் பதிவு செய்தால் விலை அதிகமாகும் என்பதால், இடத்தை மட்டும் பத்திரப்பதிவு செய்யும் வேலையில் இறங்கியிருக்கிறார்.

`அந்த வீட்டை இடிப்பதற்கு உன் பேரில் சான்றிதழ் வாங்கு’ எனப் பாதிரியாரிடம் கூறியிருக்கிறார் சத்யா. இவர்களது தொல்லை நாளுக்கு நாள் அதிகரிப்பதால், தற்போது வெளிநாட்டுக்குச் சென்றிருக்கிறார் பாதிரியார்” என்றார் வேதனையுடன்.

தென்சென்னை வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த அ.தி.மு.க பிரமுகர் ஒருவர், “தென் சென்னை வடக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் வீடு கட்டினால், ஒரு கிச்சனுக்கு 50,000 என வசூல் நடத்துகிறார் சத்யா. அவருக்குக் கப்பம் கட்டினால்தான், மேற்கொண்டு வீடு கட்ட முடியும்.

ஏ.சி.டி ஃபைபர் நெட் என்றொரு கம்பெனி, வடபழனி முழுவதும் கேபிள் ஒயரைப் புதைக்கும் வேலைகளைச் செய்து வருகிறது.

இதனால், மெட்ரோ குடிநீரோடு சாக்கடையும் கலந்துவிடும் அபாயம் ஏற்பட்டது. அந்தக் கம்பெனியின் நிர்வாகிகள் சத்யாவைப் பார்த்துள்ளனர்.

அவரோ, `உங்கள் வேலைகளைத் தொடர்ந்து செய்யுங்கள். தோண்டப்படும் பள்ளங்களை மாநகராட்சி செலவில் ரோடு போட்டுக் கொள்ளட்டும்’ எனக் கூறிவிட்டார்.

இதனால் கோபமான அந்தப் பகுதி மக்கள், ஏ.சி.டி கம்பெனி ஆட்களோடு தகராறு செய்தனர். இதனால் கடுப்பான சத்யா, போலீஸ் படையை கேபிள் புதைக்கும் இடத்தில் நிற்க வைத்துவிட்டார். பொதுமக்களும், `கைது செய்துவிடுவார்கள்’ என்ற அச்சத்தில் கலைந்துவிட்டனர்.

இதுபோன்ற சம்பவம் ஒன்று இரண்டல்ல. ஏராளம் இருக்கின்றன. சத்யாவின் ஆதிக்கத்துக்கு எதிராகப் பேச முடியாமல் பொதுமக்கள் தவிக்கின்றனர்.

ஜெயலலிதா இறந்த பிறகுதான், இவரது ஆட்டம் அதிகரித்தது. அதற்கு முன்பெல்லாம், இவர் இப்படிச் செயல்பட்டதில்லை.

இப்போது கேட்பதற்கு ஆள் இல்லாத தைரியத்தில் வலம் வருகிறார். இதற்கு முன்பு மா.செ-வாக இருந்த கலைராஜனுக்கும் ஆதி ராஜாராமுக்கும் இடையில் நடந்த சண்டையில், திடீரென கட்சிக்குள் நுழைந்து மாவட்டச் செயலாளர் ஆகி, எம்.எல்.ஏ-வாகவும் ஆகிவிட்டார் சத்யா.

இவரைப் பற்றி யாரிடம் புகார் கொடுப்பது எனத் தெரியாமல் திணறுகின்றனர் தென்சென்னை மக்கள்” என்கிறார் ஆதங்கத்துடன்.

பொதுமக்களின் குற்றச்சாட்டுகள் குறித்து, தி.நகர் எம்.எல்.ஏ சத்யாவிடம் பேசினோம். “மிகவும் தவறான தகவல். அந்தப் பாதிரியார் வெளிநாட்டுக்குப் போகவில்லை.

அங்கு குடியிருந்தவர்கள், அந்த இடத்தை வாங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அவருக்கு வேறு இடத்தை வாங்கிக் கொடுத்துவிட்டனர்.

நான் அந்த இடத்தை வாங்கவில்லை. ஏ.சி.டி ஃபைபர் நெட் கேபிள் வயர் பதிப்பிலும் தவறு நடக்கவில்லை. மழைக்காலத்தில் ட்ரில்லிங் போடுவதால், மெட்ரோ வாட்டர் இணைப்பில் சேதம் ஏற்படுத்துகிறது. `மெட்ரோ வாட்டர் ஏ.இ-யோடு கலந்து பேசி வேலைகளைச் செய்யுங்கள்’ என்றுதான் கூறியிருக்கிறேன்.

எனக்கு ஆகாதவர்கள் எதாவது சொல்லத்தான் செய்வார்கள்” என்றதோடு முடித்துக்கொண்டார்.

தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :