கேரளாவில் பாரதிய ஜனதா கட்சி பெரிய சக்தியாக மாறும்; ராஜ்நாத் சிங்

0
410
Rajnath Singh says BJP wins Parliamentary Elections

எதிர்வரும் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் கேரளாவில் அதிக தொகுதிகளை கைப்பற்றி பாரதிய ஜனதா கட்சி பெரிய சக்தியாக மாறும் என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். (Rajnath Singh says BJP wins Parliamentary Elections)

கேரள மாநில பாரதிய ஜனதா கட்சித் தலைவராக இருந்த கும்மனம் ராஜசேகரன் மிசோரம் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

இதன் பின்னர் நீண்ட நாட்களாக அந்த கட்சியின் மாநில தலைவர் நியமிக்கப்படவில்லை.
நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள சூழ்நிலையில் மாநில தலைவரை உடனே நியமிக்க வேண்டும் என்று எழுந்த கோரிக்கையை தொடர்ந்து ஸ்ரீதரன்பிள்ளை பாரதி ஜனதா மாநில தலைவராக நியமிக்கப்பட்டார்.

அவர் பதவி ஏற்ற பின்னர் பாரதிய ஜனதா கட்சிப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டது. மேலும் மாநில செயற்குழு கூட்டத்தை கூட்டவும் அவர் நடவடிக்கை எடுத்தார்.

இதன்படி கொச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங், பாரதிய ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா, ஓ.ராஜகோபால் எம்.எல்.ஏ, மாநில தலைவர் ஸ்ரீதரன்பிள்ளை மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறுகையில், கேரளாவில் பாரதிய ஜனதா கட்சிக்கு அரசியல் பிரதிநிதித்துவம் இல்லை என்ற நிலை மாறி வருகிறது.

முதலில் நமக்கு ஒரு எம்.எல்.ஏ பதவி ஓ. ராஜகோபால் மூலம் கிடைத்தது. அதன் பின்னர் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல்களிலும் பாரதிய ஜனதா வெற்றி பெற்று மாநகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பதவிகளை கைப்பற்றியுள்ளது.

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் கேரளாவில் அதிக எம்.பி தொகுதிகளை கைப்பற்றி பாரதிய ஜனதா பெரிய சக்தியாக மாறும். பாரதிய ஜனதா கட்சி ஜாதி, மத வேறுபாடு இன்றி மக்களுக்காக பாடுபடும் கட்சி ஆகும். ஆனால் சிலர் அரசியல் இலாபத்திற்காக மதவாத கட்சி என்று பிரசாரம் செய்து வருகிறார்கள்.

மக்களுக்கு முன்மாதிரியாக திகழும் பாதிரியார்கள் பாரதிய ஜனதாவில் இணைந்து உள்ளனர். பாரதிய ஜனதாவின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு அவர்கள் கட்சியில் இணைந்ததாக கூறி உள்ளனர்.

கேரளாவில் எதற்கெடுத்தாலும் காங்கிரசும், கம்யூனிஸ்டும் போராட்டம் நடத்தி மக்களை திசை திருப்பி வருகிறார்கள். அந்த நிலை விரைவில் மாறும்.

இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு மத்திய அரசு முதல்கட்ட உதவியை செய்துள்ளது. தொடர்ந்து இந்த மாநில மக்களுக்காக பல்வேறு உதவிகளை மத்திய அரசு செய்யும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags; Rajnath Singh says BJP wins Parliamentary Elections