“சம்பளங்களை நிறுத்தி வைப்பதற்கான அதிகாரம் இல்லை” : பத்தி நாதன்

0
485
NPC Ministers Salary Issue

வடக்கு மாகாண அமைச்சர்கள் அவர்களின் பணியாள் தொகுதியினருக்கான சம்பளங்களை நிறுத்தி வைப்பதற்கான அதிகாரம் தனக்கு இல்லை என்று வடக்குத் தலைமைச் செயலர் அ.பத்தி நாதன், வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். NPC Ministers Salary Issue

வடக்கு அமைச்சரவை மீள ஒழுங்கமைக்கப்படும் வரையில் 4 அமைச்சர்களுக்குரிய சம்பளம், கொடுப்பனவு மற்றும் அவர்களது தனிப்பட்ட பணியாள் தொகுதிக்கான சம்பளம், கொடுப்பனவு வழங்குவது சட்டமுரணானது எனத் தெரிவித்து வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா, வடக்கு மாகாணத் தலைமைச் செயலருக்கு கடிதம் அனுப்பியிருந்தார். அதன் பிரதி கணக்காய்வாளர் திணைக்களத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

‘மாகாண அமைச்சர்கள் 5 பேருக்குரிய சம்பளம் வழங்க முடியும். அதனடிப்படையில் வடக்கு அமைச்சர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகின்றது. மேன்முறையீட்டு நீதிமன்ற வழக்கில் தலைமைச் செயலர் பிரதிவாதி அல்ல. அதனால் நீதிமன்றத் தீர்ப்பு தலைமை அமைச்சருக்கு அறிவிக்கப்படவில்லை.

அரசிதழில் அமைச்சர்களாகப் பெயரிடப்பட்டவர்களுக்குரிய சம்பளம் வழங்கப்படுகின்றது. அரசிதழில் ஆளுநர் மாற்றம் செய்தாலோ அல்லது ஆளுநர் அறிவுறுத்தல் வழங்கினாலோ மாத்திரமே சம்பளத்தை நிறுத்த முடியும்’ என்று சாரப்பட எதிர்க்கட்சித் தலைவருக்கு பதில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

‘மேன்முறையீட்டு நீதிமன்றம் ஜூன் மாதம் 29ஆம் திகதி வழங்கிய இடைக்காலக் கட்டளைக்கு அமைவாக, அரசமைப்புக்கு ஏற்ப அமைச்சர்களின் எண்ணிக்கையை வரையறை செய்யவேண்டிய பொறுப்பு நியமன அதிகாரிகளுக்கு உரியது. வடக்கு மாகாண முதலமைச்சரின் ஆலோசனையின் அடிப்படையில் செயற்படவேண்டியவர் வடக்கு மாகாண ஆளுநர். இதுவரை அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.

நடைமுறையில் 6 அமைச்சர்கள் இருக்கின்றார்கள். வடக்கு மாகாண சபையில் என்னால் முன்வைக்கப்பட்ட அவசர கோரிக்கையை சபை ஏற்றுக் கொண்டது. அமைச்சர்களின் எண்ணிக்கையை சீர்படுத்துமாறு நியமன அதிகாரிகளைக் கோரி சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எனவே, ஜி.குணசீலன், க.சர்வேஸ்வரன், திருமதி அனந்தி சசிதரன், க.சிவநேசன் ஆகியோருக்குரிய சம்பளங்கள் இதர கொடுப்பனவுகள், அவர்களின் தனிப்பட்ட பணியாள் தொகுதியினருக்கான சம்பளங்கள் என்பவற்றை வழங்குவது சட்டமுரணானது என்பதை உங்களின் கவனத்துக்கு கொண்டுவருகின்றேன்’ என்று எதிர்க்கட்சித் தலைவர் அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

 

NPC Ministers Salary Issue, NPC Ministers Salary Issue