கொலை என்ற சந்தேகத்தின் பேரில் பெண் ஒருவரின் சடலம் தோண்டி எடுப்பு

0
756
Dug woman body suspicion murder

அம்பாறை மாவட்டம் பாலமுனை முஸ்லிம் மையவாடியில் அடக்கம் செய்யப்பட்ட பெண் ஒருவரின் உடல் சந்தேகத்தின் பேரில் தோண்டியெடுக்கப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். (Dug woman body suspicion murder)

கடந்த வெள்ளக்கிழமை மாலை மரணித்த பெண் ஒருவரின் சடலம் இவ்வாறு தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.

இயற்கையாக மரணம் எய்தினார் என நினைத்து நல்லடக்கம் செய்யப்பட்ட இவரது மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டதனை அடுத்தே இவ்வாறு தோண்டி எடுக்கப்பட்டது.

தமது தாயின் மரணத்தில் சந்தேம் இருப்பதாகத் தெரிவித்து, மகள் ஒருவரால் நேற்று முன்தினம் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

இதனையடுத்து, தொடர்ந்து பொலிஸார் அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதியும் மேலதிக நீதவான் நீதிமன்ற நீதிபதியுமான ஏ. பீற்றர் போல் முன்னிலையில் இந்த விடயம் தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

தொடர்ந்து, நீதிபதி உயிரிழந்தவரின் உடலை பிரேத பரிசோதனை செய்யுமாறு அம்பாறை பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் டொக்டர் ருசித்தவுக்கு உத்தரவிட்டதற்கமைவாக உயிரிழந்தவரின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது.

இதற்கமைவாக நீதி மற்றும் சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் பாலமுனை பொது மையவாடியில் உயிரிழந்தவரின் உடல் தோண்டியெடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அம்பாறை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த வெள்ளிக்கிழமை பாலமுனை 01, பனையடி வீதி, சரிபுத்தீன் சித்தியும்மா என்ற 59 வயதுடைய ஆறு பிள்ளைகளின் தாயார் மாலை வேளையில் மரண மடைந்துள்ளார்.

திருமணம் செய்த மகள் ஒருவருடன் வசித்து வந்த இவர் கடந்த வெள்ளிக்கிழமை மாலை வீட்டில் எவரும் இல்லாத சந்தர்ப்பத்தில் குளியலறையில் மரணமடைந்து காணப்பட்டுள்ளார்.

புனித ஹஜ்ஜுப் பெருநாளுக்காக புத்தாடைகள் கொள்வனவு செய்வதற்கென தமது பிள்ளைகள் வீட்டிலில் இருந்து சென்ற வேளையில் தனிமையில் இருந்துள்ளார்.

இதன்போது, இவரின் சகோதரனின் மகனான மருமகன் முறையைக் கொண்ட 36 வயதுடைய ஒருவர் இவ்வீட்டிற்கு வந்துள்ளார்.

வீட்டுக்கு வந்த சந்தேகநபர் வீட்டில் எவரும் இல்லாதததை அறிந்து கொண்டு படுக்கையறையிலுள்ள அலுமாரியினைத் திறந்து அதில் இருந்த நகைகளை திருடியுள்ளார்.

வீட்டின் ஒருப்பகுதியில் இருந்து வந்த மாமி முறையான ஒருவர் படுக்கை அறைப்பக்கம் சத்தம் கேட்பதை அவதானித்து, அங்கு சென்றபோது மருமகன் முறைகொண்டவர் நகைகளைத் திருடுவதை கண்டுள்ளார்.

தான் களவாடுவதை கண்டுகொண்ட சந்தேக நபர் மரணமடைந்தவரை தாக்கியுள்ளார்.
இவரது பலத்த தாக்குதலினால் சிறு காயங்கள் ஏற்பட்ட போதிலும், சந்தேக நபர் இவரை குளியலறைக்கு இழுத்துச் சென்று குளியலறையில் வீழ்ந்து மரணமானது போல் ஏனையோர் நம்பிக்கை கொள்ளும் வகையில் போட்டுள்ளார்.

வெளியில் சென்று வீடு திரும்பிய பிள்ளைகள் தமது தாயாரைக் காணாமல் சிறிது நேரம் தேடியுள்ளனர்.

திறந்திருந்த குளியலறைப் பக்கம் சென்று பார்த்த போது தாயார் வீழ்ந்து கிடப்பதைக் கண்ட மகன் ஒருவர் குடும்பத்தவரின் உதவியுடன் அவரை வைத்தியசாலைக்கு எடுத்து சென்றுள்ளார்.

வைத்தியசாலைக்கு கொண்டுசென்று வைத்தியர்கள் சிகிச்சை அளிக்க முற்பட்ட போது ஏற்கனவே இவர் மரணமடைந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து வைத்தியசாலையில் இருந்து தமது வீட்டிற்கு மரணித்தவரின் உடல் கொண்டுவரப்பட்டு இறுதிக் கிரிகைகள் நிறைவேற்றப்பட்டதனைத் தொடர்ந்து நல்லடக்கம் செய்யப்பட்டது.

குடும்பத்தவர் ஒருவரே தமது தாயாரை சூட்சுமமாகக் கொலை செய்துள்ள சம்பவத்தை துளியும் எதிர்பார்த்திராத பிள்ளைகள், தமது தாயார் இயற்கையாகவே மரணமடைந்துள்ளார் என்று எண்ணிக் கொண்டிருந்த வேளையில், மறுநாள் வீட்டைச் சுத்தம் செய்ய மகள் ஒருவர் முற்பட்ட போது தனது தாயார் அணிந் திருந்த காதணி ஒன்று வீட்டின் ஒரு மூலையில் கிடந்ததை அவதானித்துள்ளார்.

இதன்பின்னர் அலுமாரியினைத் திறந்து பார்த்தபோது நகைகள் வைக்கப்பட்டிருந்த பெட்டி திறந்துகிடப்பதையும் அதிலிருந்த நகைகள் களவாடப்பட்டிருப்பதையும் அறிந்துள்ளார்.

தனது தாயாரின் மரணத்தில் சந்தேகம் நிலவியதை அடுத்து, சந்தேக நபர்களைத் தேடும் வேட்டையில் உறவினர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்தச் சந்தர்ப்பத்தில் மரணித்தவரின் சகோதரரின் மகனான சந்தேக நபர் அன்றைய தினம் தமது வீட்டிற்கு வருகை தந்ததாகக் கூறி, இறந்தவரின் மகனொருவரிடம் தான் தனது சொந்த ஊரான அனுராதபுர மாவட்டத்தினைச் சேர்ந்த கஹட்டகஸ்திகிலியவுக்குச் செல்வதற்காக வேண்டி தலைக்கவசம் ஒன்றை இரவலுக்காக பெற்றுச் சென்ற சம்பவம் நினைவுக்கு வந்துள்ளது.

இவ்வாறு சென்றவருக்கு இறந்தவரின் மரணச் செய்தி பற்றி அறிவிக்கவென பலமுறை கையடக்கத் தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்புகொண்டும் இவர் அன்றைய தினம் பதிலளிக்காமல் இருந்துள்ளார்.

மறுநாள் சந்தேக நபர் தமக்கு தொலைபேசி அழைப்பினை ஏன் விடுத்தீர்கள் என வினவிவிட்டுதான் மரண வீடொன்றில் நின்றதால் தொலைபேசி அழைப்பிற்கு பதிலளிக்க முடியவில்லை ஏதும் பிரச்சினையா? என வினவியுள்ளார்.

தனது நண்பர் ஒருவரிடம் இறந்த பெண்ணின் பெயரைக் குறிப்பிட்டு அவர் மரணித்துள்ளாரா? என நீங்கள் விசாரித்திருக்கிறீர்களே. அப்படியானால் ஏன் நீங்கள் வரவில்லை எனக் கேட்டபோது சந்தேக நபர் முக்கிய வேலை ஒன்று உள்ளது அதனால் வரமுடியவில்லை என குறிப்பிட்டதில் சந்தேகம் எழுந்தபோது அப்படியானால் பாலமுனைப் பிரதேசத்திற்கு வாருங்கள் என தொலைபேசியில் உறவினர் குறிப்பிட்டுள்ளார்.

ஊருக்கு வருகிறேன் எனக் குறிப்பிட்ட சந்தேக நபர் கடந்த சனிக்கிழமை மாலை பாலமுனைப் பிரதேசத்திற்கு வருகை தந்துள்ளார்.

அவரிடம் சென்று மரணித்த பெண்ணின் மகன் ஒருவர், எனது தாய் இயற்கையாக மரணிக்கவில்லை யாரோ ஒருவர் கொலை செய்துதான் மரணித்துள்ளார். உங்கள் மீதுதான் எமக்கு சந்தேகமுள்ளது. நகைகள் திருடப்பட்டுள்ளன.

அவற்றை திருடியவர்தான் தாயாரை கொலை செய்துள்ளார். நீங்கள் குடும்ப உறவுக்காரர் என்பதால் இவ்விடயத்தினை பெரிதுபடுத்தாமல் விட்டு விடுகின்றோம்.

நீங்கள் எடுத்துச் சென்ற நகைகளை தாருங்கள் என்றிருக்கின்றார். அப்போது ஆத்திரம் கொண்டவர் போல் நடித்த சந்தேக நபர் எனது மாமியினை நான் கொலை செய்வேனா என ஆக்ரோஷத்துடன் கேட்டிருக்கின்றார்.

பின்னர் இருவருக்கும் வாய்த்தர்க்கம் வரை சென்று இவ்விடயத்தினை பொலிஸாரிடம் சென்று முறைப்பாடு செய்து உண்மையினை வரவழைக்கவா அல்லது உண்மையினை ஒத்துக்கொள்கிறீர்களா எனக் கேட்டபோது,

நான் நககைகளை எடுத்த போது மாமி கண்டுவிட்டதால் இலேசாகத் தாக்கியதாகவும், அதன் பின்னர் அவர் மரணமாகியுள்ளதாகவும் குறிப்பிட்ட சந்தேக நபர், தான் எடுத்துச் சென்ற சுமார் நான்கு பவுண் தங்க நகைகளில் ஒருசிலவற்றை கல்முனை நகைக்கடையொன்றில் அடகு வைத்துள்ளதாகவும் மீதியினை தருவதாகவும் வாக்களித்து மறுநாள் மரணித்தவரின் மகனை திருகோணம் லைக்கு வருமாறு கூறியுள்ளார்.

தான் மறுநாள் வருவதாக கூறி, அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் இது பற்றி முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார் இறந்தவரின் மகன் ஒருவர்.

பொலிஸார் சிலரையும் அழைத்துக் கொண்டு திருகோணமலை நோக்கி இறந்தவரின் மகன் மாத்திரம் வருவதுபோல் சந்தேக நபருக்கு தொலைபேசி அழைப்பு விடுத்தபோது தான் முக்கிய வேலை காரணமாக வேறிடத்தில் நிற்பதாகவும், நகைகள் சிலவற்றை நண்பர் ஒருவர் கொண்டு வருவதாகவும் கூறியுள்ளார்.

அதன் பின்னர் நண்பர் அவ்விடத்திற்கு நகைகளுடன் வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து ஒரு முக்கிய விடயம் பேசவேண்டும் ஐந்து நிமிடம் சந்திக்க முடியுமா என சந்தேக நபரிடம் கேட்டபோது தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் வருமாறு பணித்துள்ளார்.

தன்னையும் கொலை செய்து விடுவாரோ என்று அஞ்சிய உறவினர் இல்லை பஸ் நிலையத்திற்கு சிறிது நேரம் செலவு செய்து தயவு செய்து வாருங்கள் என குறிப்பிட்டுள்ளார்.

சம்மதித்த சந்தேக நபர் பஸ் நிலையத்தருகே வந்தபோது மறைந்திருந்த பொலிஸார் அவரை கைதுசெய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டு அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்ட சந்தேக நபர் விசாரணை செய்யப்பட்டு அவரிடமிருந்த தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளன.

சந்தேக நபர் அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் அக்கரைப்பற்று பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கொலை என சந்தேகத்தில் பெண் ஒருவரின் ஜனாஸா தோண்டி எடுக்கப்பட்டது. கொலை சந்தேக நபர் உறவினர் காரணமும் வெளியானது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Dug woman body suspicion murder