தெலிங்கானாவில் லஞ்சம் கொடுக்க மறுத்த விவசாயியை வருவாய் அலுவலக அதிகாரிகள் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலிங்கானா மாநிலம் வாரங்கல்லை சேர்ந்த விவசாயி ஒருவர், தனது இரண்டு ஏக்கர் நிலத்திற்கான பட்டா பாஸ்புக்கை வழங்கக் கோரி வாரங்கல் வருவாய் அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார்.
பலமுறை அலைந்த போதிலும் அவருக்கு பாஸ்புக் கிடைக்கவில்லை. லஞ்சம் கொடுத்தால் தான் வேலை ஆகும் என கூறியுள்ளனர் வருவாய் துறை அதிகாரிகள். இதனால் விரக்தியடைந்த அந்த விவசாயி, வருவாய் துறை அதிகாரியின் சட்டையை பிடித்துள்ளார்.
உடனே அவரை பிடித்து உள்ளே இழுத்து வந்த அதிகாரிகள் சிலர் வயதில் மூத்தவர் என்றும் பாராமல் அவரை தாக்கியுள்ளனர். இதனை அங்கிருந்த நபர் ஒருவர் வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார், இதுகுறித்து விசாரணை நடத்தி குறிப்பிட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.