காணாமல் போனோரின் உறவினர்களுக்கு மனோ கணேசன் கொடுத்த அதிர்ச்சி தகவல்

0
1144
Mano Ganesan’s shocking information relatives missing people

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு கணிசமான நஷ்டஈட்டு தொகையை அரசாங்கம் வழங்க வேண்டும் என்றும் தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்க, அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார். (Mano Ganesan’s shocking information relatives missing people)

யுத்தம் முடிந்து ஏறக்குறைய பத்து வருடங்கள் முடிந்து விட்ட போதிலும் காணாமல் போனோர் குறித்த விசாரணைகளை, மீண்டும், மீண்டும் நடத்தி, ஏற்கனவே விரக்தியின் எல்லைக்கு போய்விட்ட இந்த மக்களை, அழவிடுவதில் தனக்கு உடன்பாடு இல்லை என்றும் கூறியுள்ளார்.

காணாமல் போனோர் கணக்கெடுப்புகள் எத்தனை முறை நடந்துவிட்டன? என்றும் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவிடம், அமைச்சர் மனோ கணேசன் கேள்வியெழுப்பியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இன்று மீண்டும் நடைபெறும் கணக்கெடுப்புடன் அதற்கு சமாந்திரமாக, குடும்ப தலைவர்களை இழந்த பல்லாயிரம், பெண்களுக்கும், நிர்க்கதியாகிவிட்ட குழந்தைகளுக்கும், முதியோருக்கும், கணிசமான நஷ்டஈட்டு தொகைகள் வழங்கப்பட வேண்டும்.

எந்தவொரு நஷ்ட ஈட்டு தொகையும், காணாமல் போன உறவுகளை மீண்டும் கொண்டு வராது. இழந்த உறவுகளுக்கு அது ஈடாகாது. இது எவரையும் விட எனக்கு நன்கு தெரியும்.

ஆனால், இந்த கணிசமான நஷ்டஈட்டு கொடுப்பனவுகள், இந்த நிர்க்கதியான மக்களின் வாழ்நிலைமைகளை கொஞ்சமாவது தூக்கி நிறுத்தும்.

இந்த நஷ்டஈட்டு வழங்கள் தொடர்பில் சர்வதேச சமூகம் உதவ தயாராக இருப்பதும் எனக்கு தெரியும். ஆகவே இனியும் தாமதிக்க வேண்டாம். இதை இழுத்துக்கொண்டே போனால், இன்னும் இரு வருடங்களில் எமது அரசு முடிவுக்கு வந்து, இதைக்கூட செய்ய முடியாமலேயே போய் விடும் என நிதி அமைச்சர் மங்கள சமரவீரவிடம், தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்க, அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.

தம் கணவர்மார்களை இழந்த சகோதரிகள், அவர்களது பிள்ளைகளுடன் இன்று பெருந்தொகை குடும்பங்களை தலைமை தாங்குகிறார்கள். இந்நாட்டில் வடகிழக்கில் இத்தகைய கைம்பெண்கள் சுமார் 70,000 பேருக்கு மேல் இருப்பது வரலாற்று கொடுமை.

தங்கள் கணவர்மர்களை இழந்த இவர்கள், கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக, எந்த அளவு சவால் மிக்க வாழ்நிலைமைகளை சந்திக்கிறார்கள் என்பதை அரசாங்கம் கணக்கில் எடுக்க வேண்டும்.

அதேபோல் பிள்ளைகளை இழந்த வயதான பெற்றோர் இன்று பெரும் துன்பங்களை எதிர்கொள்கிறார்கள். அவர்களையும் கணக்கில் எடுக்க வேண்டும்.

சர்வதேச சமூகம் இந்த மக்களுக்கு உதவ காத்திருக்கின்றது. அதற்கு நாம் வழிவிட வேண்டும். இனியும் தாமதிக்க வேண்டாம். எவ்வளவு நஷ்ட ஈடு வழங்கப்பட்டாலும், அது காணாமல் போன உறவுகளை மீண்டும் கொண்டு வராது.

அது அடிப்படை உண்மை. ஆனால், அது இந்த நிர்க்கதியாகிவிட்ட மக்களின் வாழ்வாதாரத்தை கொஞ்சமாவது தூக்கி நிறுத்தும் என நான் நம்புகிறேன்.

tags :- Mano Ganesan’s shocking information relatives missing people

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites