இந்துக்களின் கடும் எதிர்ப்பு : பதவி விலகுகிறார் காதர் மஸ்தான், ஜனாதிபதியை இன்று சந்திக்கிறார்

0
594
kadar Masthan ministry post

இந்து கலாசார பிரதியமைச்சுப் பதவியிலிருந்து விலகி, மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் வடக்கு அபிவிருத்தி பிரதியமைச்சராக மீளவும் பதவிப் பிரமாணம் செய்யவுள்ளதாக பிரதியமைச்சர் காதர் மஸ்தான் தெரிவித்தார்.(kadar Masthan ministry post)

இதற்காக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இன்று வியாழக்கிழமை சந்திக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்து கலாசார அமைச்சை இந்து மதம் சாராத ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளமைக்கு இந்துக்கள் சார்பில் கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையிலேயே இந்த முடிவுக்கு வந்ததாக காதர் மஸ்தான் குறிப்பிட்டார்.

இந்து கலாசார பிரதியமைச்சுப் பொறுப்பை தனது கட்டுப்பாட்டிலிருந்து மீளப் பெற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் எழுத்துமூல கோரிக்கையை அவர் நேற்றைய தினம் முன்வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அவரது எழுத்துமூலமான கோரிக்கையை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் வடக்கு அபிவிருத்தி பிரதியமைச்சராக மீளவும் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்ய வேண்டும். அதற்காக ஜனாதிபதியை இன்று சந்திக்கின்றேன் என்று பிரதியமைச்சர் காதர் மஸ்தான் மேலும் தெரிவித்தார்.

இந்து சமய விவகார பிரதி அமைச்சராக இஸ்லாமியரான காதர் மஸ்தான் நியமிக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ள நிலையில், இந்த நியமனம் இன்று ஜனாதிபதியால் மீளாய்வு செய்யப்படும்.

இந்து மத விவகார பிரதி அமைச்சராக, காதர் மஸ்தான் நேற்று முன்தினம் நியமிக்கப்பட்டார். இதற்கு கூட்டு அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.

ஐ.தே.க. வின் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் இதனைக் கடுமையாக சாடியிருந்தார்.

அத்துடன், இந்த நியமனத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் எதிர்ப்பதாக, கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவும் கூறியிருந்தார்.

இதனிடையே, சைவ சமய அமைப்புகள் பலவும், இந்த நியமனத்துக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளன.

நேற்று நல்லூரில் சைம சமய அமைப்புகளின் சார்பில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றும் நடத்தப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக, வடக்கு அபிவிருத்தி, புனர்வாழ்வு மீள்குடியேற்றம் மற்றும் இந்து சமய விவகார அமைச்சரான, டி.எம்.சுவாமிநாதன், ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளார்.

“ஒரு அமைச்சர் என்ற வகையில், இந்த நியமனத்தில் எனக்கு எந்த அதிகாரமும் இல்லை.

ஜனாதிபதியே, பிரதி அமைச்சரை நியமிக்கும் அதிகாரம் கொண்டவர். இந்த விடயத்தை அவரது கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளேன். ஜனாதிபதி செயலர் ஒஸ்ரின் பெர்னான்டோவுக்கும் தகவல் தெரிவித்துள்ளேன்.

இந்த நியமனம் தொடர்பாக உடனடியாக சாதகமான பதில் அளிக்கப்படுடும் என்று ஜனாதிபதி செயலர் எனக்குத் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, மஸ்தானை பிரதி அமைச்சராக நியமிப்பதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை என்பதையும் கூறிக் கொள்ள விரும்புகிறேன்.
அவருடன் கூட்டாக அமைச்சின் பணிகளை நிறைவேற்ற முடியும்” என்றும் அமைச்சர் சுவாமிநாதன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

tags :- kadar Masthan ministry post

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites