மண்டைதீவில் மக்களின் காணியை விட்டு கடற்படையினர் வெளியேற வேண்டும்

0
833
Northern Provincial Council members visited mandaitivu

(Northern Provincial Council members visited mandaitivu)

யாழ்ப்பாணம் மண்டைதீவில் கடற்படையினரால் சுவீகரிக்கப்படவுள்ள பகுதிகளைப் வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் இன்றைய தினம் பார்வையிட்டுள்ளனர்.

இன்றைய தினம் மண்டைதீவுக்குச் சென்ற வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான விந்தன் கனகரட்ணம் மற்றும் கஜதீபன் ஆகியோர் ஜே 07 கிராம அலுவலகர் அலுவலகத்தில் போடப்பட்டிருந்த கடற்படையினரால் சுவீகரிக்கப்படவுள்ள காணி உரிமையாளர்களின் பெயர் பட்டியல்களைப் பார்வையிட்டனர்.

அத்துடன், கிராம அலுவலகர் மற்றும் சம்பந்தப்பட்ட பொதுமக்களைச் சந்தித்து உரையாடியுள்ளனர்.

1990 ஆம் ஆண்டு மண்டைதீவை இராணுவம் ஆக்கிரமித்த காலப் பகுதியில் இந்தப் பகுதியில் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்ட பெரிய பெரிய வீடுகளையும், நல்ல தண்ணீர் கிணறுகளையும் கொண்ட தமது குடியிருப்புக்களை விட்டு மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு 9 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் இந்தப் பகுதியில் குடியமர மக்கள் அனுமதிக்கப்படவில்லை.

29 க்கும் மேற்பட்ட குடியிருப்புக் காணிகளையும் வளம் நிறைந்த வயல் காணிகளையும் தோட்ட நிலங்களையும் கொண்ட 18 ஏக்கர் பகுதியே மண்டைதீவில் நல்ல தண்ணீரைக் கொண்ட பகுதியாகவுள்ளது.

மண்கும்பானில் இருந்து குழாய் வழியாகவரும் குடிநீருக்காக மக்கள் வரிசையில் காத்துள்ளனர். இப்பகுதி விடுவிக்கப்பட்டால் மண்டைதீவு மக்களின் மிகப் பெரிய பிரச்சினையான குடிநீர் பிரச்சினை நிறைவுக்கு வந்துவிடும்.

அதுமட்டுமல்லாமல் சோழக் காற்றுக் காலங்களில் மண்டைதீவின் ஒதுக்குப் பகுதியாகவுள்ள கடற்படையினரின் வேலுசுமண கடற்படை முகாம் அமைந்துள்ள இந்த கடற்பகுதியிலேயே மீனவர்கள் தமது பெரிய படகுகளை நங்கூரமிட்டு வைப்பார்கள்.

எவ்வளவு பெரிய காற்று வீசினாலும், அவர்களுக்கு எந்தக் கவலையும் இருந்ததில்லை. படகுகள் பாதுகாப்பாகவே இருக்கும்.

ஆனால் தற்பொழுது காற்று வேகமாக வீசினாலும் கூட எந்த இரவிலும் எழுந்து கடற்கரைக்கு ஓடிச்சென்று தமது படகுகள் பாதுகாப்பாக உள்ளதா எனப் பார்க்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

தமது சொந்த நிலங்களில் கடற்படையினர் சுகமாக வாழ இந்த மக்கள் யாழ். நகரில் வாடகை வீடுகளிலும், சொந்த ஊரில் இன்னொருவரின் காணியில் ஓலைக் குடிசைகளிலும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் மண்டைதீவுப் பகுதியில் ஒரு அங்குல நிலத்தினைக் கூட கடற்படையினருக்கு விட்டுக்கொடுப்பதற்கு தாம் இடமளிக்கமாட்டோம் என்றும் மக்களின் வாழ்விடங்களை விட்டு கடற்படையினர் நிரந்தரமாக வெளியேற வேண்டும் என்றும் வடமாகாண சபை உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.

அவர்கள் தங்களது சொந்த வீட்டில், சொந்த நிலத்தில் சுதந்திரமாக வாழவேண்டும் என்றும் அதற்காக தாம் மக்களோடு இணைந்து நிலங்களை மீட்பதற்காகப் போராடுவோம் என்றும் கூறியுள்ளனர்.

More Tamil News

Tamil News Group websites :

Tags; Northern Provincial Council members visited mandaitivu