பாலித தெவரப்பெருமவிற்கு புதுப்பெயர் வைத்த விவசாயிகள்

0
973
New name palitha thewarapperuma

(New name palitha thewarapperuma)
நுவரெலியா மாவட்ட செயலக பகுதிக்குட்பட்ட அம்பேவெல, பட்டிப்பொல கந்தஎல, 30 ஏக்கர் மற்றும் 7 ஆம் கட்டை போன்ற பகுதிகளில் உள்ள விவசாய காணிகளுக்கு காட்டு எருமைகள் வேலிகளை உடைத்துக்கொண்டு ஊடுருவதனால் ஏற்படும் சேதங்களை அதிகாரிகள் கண்டுகொள்ளாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

அத்துடன், வனஜீவராசிகள் பிரதியமைச்சர் பாலித தெவரப்பெருமவின் செயற்பாட்டை கண்டித்தும் குறித்த பிரதேசங்களில் உள்ள விவசாயிகள் இன்று அம்பேவெல பிரதான புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

எதிர்ப்பு பதாதைகளை ஏந்திய வண்ணம், பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெருமவிற்கு எதிராக கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

விவசாயிகளால் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய மாகாண முன்னாள் விவசாய அமைச்சர் நிமல் பியதிஸ்ஸ, நுவரெலியா பிரதேச சபை உப தலைவர் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

கடந்த பல வருட காலமாக காட்டு எருமைகளால் தமது பயிர் நிலங்கள் சேதமாக்கப்பட்டு வந்த நிலையில் இதுதொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கும், பிரதேச செயலாளருக்கும் பலமுறை அறிவித்திருந்த போதிலும் தமக்கு உரிய பதில் கிடைக்காமையினாலேயே இந்த ஆர்ப்பாட்டத்தில் தாம் ஈடுபட்டதாக ஆர்ப்பாட்டகாரர்கள் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை இந்த காட்டு எருமைகளின் அச்சுறுத்தல் காரணமாக தமது பிள்ளைகள் பாடசாலை விட்டு வரும் பொழுதும் தாமும் மாலை வேளைகளில் குறித்த வீதிகளில் பெரும் அச்சத்துடன் பயணிக்க நேரிட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த பிரச்சினைக்கு தீர்வு காணும் முகமாக அம்பலாங்கொடை பிரதேசத்தில் பாற் பண்ணைகளுக்கு குறித்த மாடுகளைப் பிடித்துகொண்டு செல்வதற்கான வேலைத்திட்டங்களை கடந்த பல மாதங்களாகவே நுவரெலியா பிரதேச செயலகத்தினால் முன்னெடுக்கப்பட்டு வந்திருந்தது.

குறித்த மாடுகளை பிடிப்பதற்கும், கொண்டு செல்வதற்குமான அனுமதி பத்திரத்தையுடைய பண்ணையாளர் ஒருவர் குறித்த மாடுகளை கடந்த 5 மாத காலங்களாக அவதானித்து, 10 காட்டு எருமைகளை பிடித்து ஓர் இடத்தில் கட்டி வைத்திருந்திருந்துள்ளார்.

எனினும் குறித்த பிரதேசத்தின் ஊடாக பயணித்த வனவிலங்குகள் மற்றும் வனஜீவராசிகள் பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெரும கட்டி வைத்திருந்த இந்த மாடுகளை அவதானித்துள்ளார்.

உடனடியாக தமது சகாக்களுடன் தாமும் இணைந்து குறித்த மாடுகளை விடுவிக்கும் முயற்சியில் ஈடுபட்ட வேளையில் பிரதேச விவசாயிகளுக்கும் பிரதி அமைச்சர் உட்பட அந்த குழுவினருக்கும் இடையில் கடந்த 14 ஆம் திகதி வாக்குவாதம் இடம்பெற்று முறுகல் நிலைமை ஏற்பட்டது.

எனினும், அமைச்சு பதவியின் பலத்தை பயன்படுத்திக் கொண்ட பிரதி அமைச்சர் குறித்த மாடுகளை விடுவித்துள்ளார்.

அவ்வாறு விடுவிக்கப்பட்ட மாடுகளால் 7 ஆம் கட்டை பிரதேசத்தில் இருக்கக்கூடிய சில பயிர் நிலங்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாகவும் ஆர்ப்பாட்டகாரர்கள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தமது பயிர் நிலங்களை காட்டு மாடுகளிடமிருந்து பாதுகாத்து தருமாறு தெரிவித்த ஆர்ப்பாட்டகாரர்கள், அரசாங்கத்தின் குறித்த அமைச்சரின் செயற்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்த அதேவேளை அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

சுமார் 2 மணித்தியாலங்களாக விவசாயிகள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு பின்னர் கலைந்து சென்றமை குறிப்பிடத்தக்கது.

More Tamil News

Tamil News Group websites :

Tags; New name palitha thewarapperuma