செவிலித்தாய்க்கு ஆயுள் தண்டனை!

0
529
yoselyn ortega Sentence

yoselyn ortega Sentence

இரு சிறுவர்களைத் துன்புறுத்திக் கொன்ற செவிலித்தாய்க்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

56 வயது யோசலின் ஒர்டேகா தமது பராமரிப்பிலிருந்த ஆறு வயது லுசியாவையும் இரண்டு வயது லியோவையும் சமையலறைக் கத்தியால் குத்திக் கொன்றார்.

சம்பவம் 2012 அக்டோபரில் இடம்பெற்றுள்ளது.

தமது மூன்றாவது குழந்தையுடன் வெளியில் சென்றிருந்த பிள்ளைகளின் தாய் மரினா கிரீம், யோசலின் லுசியாவை நடன வகுப்புக்கு அழைத்துச்செல்லவில்லை என்பதையறிந்து பதற்றமடைந்து வீடு திரும்பினார்.

தமது மூத்த பிள்ளைகள் இருவரும் குளியல் அறைத் தொட்டியில் மாண்டு கிடப்பதைக் கண்டார் அந்த 41 வயதுத் தாயார்.

அதைத் தொடர்ந்த வழக்கு விசாரணைகளில் குற்றம் நிரூபணமாகி நேற்று யோசலினுக்கு பரோல் வாய்ப்பற்ற ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

பணப் பிரச்சினைகளில் சிக்குண்டிருந்த யோசலின், முதலாளியின் செல்வ வளத்தைப் பொறுக்காமல் திட்டமிட்டுச் செயல்பட்டதாக அரசாங்கத்தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

யோசலினின் மனநலை பாதிக்கப்பட்டிருப்பதாக அவரது வழக்கறிஞர்கள் தற்காத்து வாதிட்டனர்.

உலகெங்கும் வேலைக்குச் செல்லும் தாய்மாரை உலுக்கிய அந்த வழக்கு, பிரபல பிரெஞ்சு நாவலுக்கும் வித்திட்டது.